கொரோனாவின் தீவிரத்தை இன்னும் பலர் உணரவில்லை... சு.வெங்கடேசன் எம்.பி. வேதனை
மதுரை: சந்தைகளில் முப்பது சதவிகிதத்தினரே முகக்கவசம் அணிவதாகவும், கொரோனாவின் தீவிரத்தை இன்னும் பலர் உணரவில்லை எனவும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த நூறு பேரை வைத்து அவர் நடத்திய ஆய்வில் இதனை கண்டறிய முடிந்ததாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசம்.. சீன அதிகாரிகள் கவலை
சந்தைகள்
கொரோனா தொற்று பரவலின் ஊற்றுப்பகுதிகளாக, மக்கள் அதிகமாகக் கூடும் மையங்களே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக சந்தைப்பகுதி என்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் முன்பே பரவலின் அதிதீவிர மையமாக மாறும் ஆபத்து நிறைந்ததாக உள்ளது.கோயம்பேடு அனுபவம் தமிழகம் முழுவதற்கும் பெரும்பாடத்தினைக் கற்றுக்கொடுத்துள்ளது.
தீவிர கண்காணிப்பு
இந்நிலையில், கடந்த வாரம் சென்னையிலிருந்து மதுரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாவதையொட்டி, அங்கிருந்து வரும் அனைவருக்கும் சோதனை செய்ய வேண்டும் என்று சூன் 8ஆம் தேதி ஆட்சியரைச் சந்தித்து வலியுறுத்தினேன். அப்பொழுதே மதுரையில் இயங்கும் சந்தைகளைத் தீவிரமாகக் கவனிக்க வேண்டும் என்றும் நாங்கள் மதுரையில் இயங்கும் சந்தைகளை மையப்படுத்தி ஆய்வு மேற்கொள்கிறோம் என்றும் தெரிவித்தேன்.
அனைத்து சந்தைகள்
அதன் அடிப்படையில் சூன் 9ஆம் தேதி இரவு 11 மணி முதல் 10ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை மதுரையில் இயங்கும் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட், மாட்டுத்தாவணி பழ மார்க்கெட், மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட், நான்குவழிச் சாலையிலுள்ள வண்டியூர் மார்க்கெட், பரவை மார்க்கெட், கீழமாசிவீதியில் இயங்கும் மொத்த வியாபாரப்பகுதி ஆகியவற்றில் முகக்கவசம் அணிந்து வருபவர்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டோம்.
30% மட்டுமே முகக்கவசம்
8963 பேரை ஆய்வு செய்ததில் 2711 பேர் மட்டுமே முறையான முகக்கவசம் அணிந்தவர்களாக உள்ளனர். அதாவது 30% பேர் மட்டுமே முறையாக முகக்கவசம் அணிந்துள்ளனர். சந்தையைக் காப்பாற்றுவது மொத்த சமூகத்தையும் காப்பாற்றுவதற்குச் சமம். மதுரையில் இயங்கும் சந்தைகள் மதுரைக்கானவை மட்டுமல்ல, அருகிலுள்ள ஆறு மாவட்டங்களுக்கும் ஆனவை.
விழிப்புணர்வு
எனவே பொதுமக்கள் சந்தைக்கு வரும்பொழுதும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் விழிப்புணர்வோடு செயல்படுங்கள் என்றும் அரசு நிர்வாகம் சந்தைகளைக் கூடுதல் கவனத்தோடு கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவற்றைச் சார்ந்த தோழர்கள் சுமார் 100 பேர் முழு இரவும் இந்த ஆய்வில் ஈடுபட்டார்கள்.
சந்தைகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் பின்வருமாறு;
மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்:
1. முகக்கவசம் அணிந்தவர்கள்; 647
2. முகக்கவசம் அணியாதவர்கள்; 362
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்: 570
மொத்தம் 1,579
முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 40%
மாட்டுத்தாவணி பழம் மார்க்கெட்
1. முகக்கவசம் அணிந்தவர்கள்: 330
2. முகக்கவசம் அணியாதவர்கள்; 197
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்; 245
மொத்தம் 772
முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 42%
மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்
1. முகக்கவசம் அணிந்தவர்கள்; 139
2. முகக்கவசம் அணியாதவர்கள்: 37
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்; 49
மொத்தம் 225
முறையாக முககவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 62%
வண்டியூர் மார்க்கெட்
1. முகக்கவசம் அணிந்தவர்கள்; 95
2. முகக்கவசம் அணியாதவர்கள்; 32
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்: 23
மொத்தம் 150
முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 63%
பரவை மார்க்கெட்
1. முகக்கவசம் அணிந்தவர்கள்; 637
2. முகக்கவசம் அணியாதவர்கள்; 2,085
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்: 815
மொத்தம் 2,537
முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 25%
கீழவாசல் - வாகன ஓட்டுனர்களும் சுமைதூக்குவோரும்
1. முகக்கவசம் அணிந்தவர்கள்; 474
2. முகக்கவசம் அணியாதவர்கள்: 1,245
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்: 222
மொத்தம் 1,941
முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 24%
யானைக்கல் - வாகன ஓட்டுனர்களும் சுமைதூக்குவோரும்
1. முகக்கவசம் அணிந்தவர்கள்: 389
2. முகக்கவசம் அணியாதவர்கள்: 1,148
3. முகக்கவசம் சரியாக அணியாதவர்கள்: 222
மொத்தம் 1,759
முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 22%
- சந்தை ஆய்விற்கு உட்பட்டவர்கள் 8,963
- முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் எண்ணிக்கை 2,711
- முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் மொத்த சராசரி 30%
இவ்வாறு முகக்கவசம் அணிவது தொடர்பான தனது ஆய்வு அறிக்கையில் சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.