தங்க ரூம் கேட்டார் நிர்மலாதேவி.. அத்தோடு முடிந்தது.. என் கணவர், நிரபராதி,அப்பாவி..மனைவி சுஜா குமுறல்
என் கணவர் குற்றமற்றவர் என கைதான முருகன் மனைவி சுஜா தெரிவித்துள்ளார்.
மதுரை: எதுக்காக என் புருஷனையே குத்தம் சொல்றீங்க? நிர்மலாதேவிக்கு இன்னும் சில பல்கலைக்கழக அதிகாரிகள்கூட தொடர்பு இருந்ததே... அவர்களையெல்லாம் ஏன் யாரும் விசாரிக்கல? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார் கைதான முருகனின் மனைவி சுஜா.
நிர்மலாதேவி விவகாரத்தில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகனும் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் உள்ளார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டிலும் நடந்து வருகிறது. இந்நிலையில் சிறையிலுள்ள முருகனின் மனைவி சுஜா மதுரையில் செய்தியாளர்களிம் பேசினார். அப்போது தன் கணவனுக்கு ஜாமீன் என் வழங்கப்படவில்லை, அவர் மட்டும்தான் குற்றவாளியா? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளுடன் தனது ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்தார். அப்போது சுஜா பேசியதாவது:
அபாண்டம்... பொய்...
நிர்மலாதேவி விவகாரத்தில் எனது கணவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விஷயத்தில் சிபிசிஐடி போலீசார் தயாரித்துள்ள வாக்குமூலம் எல்லாமே பொய்தான்... கொஞ்சம் கூட உண்மை இல்லை... என் கணவருக்காகத்தான் நிர்மலாதேவி மாணவிகளிடம் பேசினார் என்று அபாண்டமாக சொல்லி இருக்கிறார்கள்.
உதவி கேட்டார்
புத்தாக்க பயிற்சிக்கு வந்தபோது நிர்மலாதேவி என் கணவரிடம் தங்குவதற்காக ஒரு ரூம் கேட்டார். அதற்கு என் கணவர், இந்த விஷயத்தை கருப்பசாமி கிட்ட போய்நீங்கள் சொல்லலாமே என்றுதானே சொன்னார். அதோடு அது முடிஞ்சு போச்சு. பிரச்சனை பெரிசானதும், எனக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள் என்று திரும்பவும் என் புருஷனிடம் செல்போனில் உதவி கேட்டது நிர்மலாதேவிதான். அப்போதுகூட என் கணவர், "யாருக்காக மாணவிகளிடம் பேரம் பேசினீங்களோ, அங்கேயே போய் உதவியையும் கேளுங்கள், இந்த விஷயத்தில் என்னால எதுவும் செய்ய முடியாது" என்றுதான் என் கணவர் சொன்னார்.
போன் செய்யவே இல்லை
நிர்மலாதேவிக்கு எப்பவுமே என் புருஷன் போனே செஞ்சது கிடையாது. போனே செய்யாத ஒருத்தர், எப்படி அவருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியும்? இதைதான் போலீசார் தவறாக கூறியுள்ளார்கள். நிர்மலாதேவியே என் கணவர் பெயரை சொல்லாதபோது, போலீசார் ஏன் அவர் பெயரை தொடர்புபடுத்த வேண்டும்?
என் புருஷன் குற்றவாளியா?
நிர்மலாதேவி பல்கலைகழகம் வந்தபோது, அவரை வரவேற்கவும், வழி அனுப்பவும் பல்கலைக்கழக முக்கிய அதிகாரியின் கார் பயன்படுத்தப்பட்டது. ஏனென்றால் நிர்மலாதேவியுடன் பல்கலைக்கழக அதிகாரிகள் மேலும் சிலருக்கு தொடர்பு இருந்தது. அவங்களையெல்லாம் இந்த வழக்கில் போலீசார் கைது செய்யாமல், என் புருஷனை மட்டும் குற்றவாளியாக காட்டுவது ஏன் என தெரியவில்லை.
ஜாமீன் ஏன் தரவில்லை?
அதுமட்டுமில்லை.. கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டு கைதானவர்களுக்கெல்லாம் கொஞ்ச நாளிலேயே ஜாமீன் கிடைக்கும்போது, ஒரு குத்தமும் செய்யாத என் கணவருக்கு 7 மாதங்களாகியும் இதுவரை ஜாமீன் தரப்படவே இல்லையே ஏன்? இதற்கு பின்புலமாக யாரோ பிரபலங்கள் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த வழக்கில் 3 பேரை மட்டும் சிக்க வைத்துவிட்டு, மற்றவர்களை தப்ப விட்டு விட்டனர்.
விடுதலை செய்ய வேண்டும்
தப்பிக்க விட்டவர்கள் அனைவருமே முக்கியமான பிரமுகர்கள்தான்!! நிர்மலாதேவியை மிரட்டி கையெழுத்து வாங்கியதைபோலதான், என் கணவரையும் மிரட்டி வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள். வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளையும் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எனவே என் கணவருக்கு நிச்சயம் ஜாமீனில் விடுதலை செய்தே ஆக வேண்டும்" இவ்வாறு சுஜா கூறினார்.