இந்தா ஆரம்பிச்சுட்டோம்.. தவிர்க்க முடியாத தலைவன் சூர்யா... மதுரையை தெறிக்கவிட்ட பிரமாண்ட போஸ்டர்கள்!
மதுரை: நீட் தேர்வை கடுமையாக விமர்சித்திருக்கும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மதுரையில் பிரமாண்ட போஸ்டர்களை ஒட்டி தவிர்க்க முடியாத தலைவன் என பட்டம் சூட்டியுள்ளனர் அவரது ரசிகர்கள்.
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தங்களை மாய்த்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை ஒட்டி நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
நீட் தற்கொலை.. அரசியல் லாபத்திற்காக இளைஞர்களை மூளை சலவை செய்கிறார்கள்.. பிரேமலதா குற்றச்சாட்டு!
சூர்யாவின் சுளீர் அறிக்கை
அந்த அறிக்கையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்ச் சமூகத்தின் குரலாக தமது கொந்தளிப்பை கொட்டியிருந்தார் நடிகர் சூர்யா. இந்த அறிக்கையில் சூர்யா பதிவு செய்திருந்த ஒவ்வொரு அடியும் சவுக்கடியாக இருந்தது என்பதால்தான் இப்போது வரை அவர் மீது பாய்ந்து பிராண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நீட் போன்ற மனுநீதி தேர்வுகள்
அதில், நீட் போன்ற ‘மனுநீதி' தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது என கதறி இருந்தார் சூர்யா.
சூர்யாவுக்காக நீதிமான்கள் ஆதரவு
மேலும் உயிருக்குப் பயந்து ‘வீடியோ கான்பிரன்ஸிங்' மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது எனவும் சீறியிருந்தார். இதற்காகவே சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்கிற குரல் எழுந்தது. ஆனால் சூர்யாவுக்கு ஆதரவாக நீதிமான்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
மதுரையை மிரட்டும் போஸ்டர்
இந்த நிலையில்தான் மதுரை சுவர்களை தெறிக்கவிடும் வகையில் பிரமாண்ட போஸ்டர்களை ஒட்டி சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் அவரது ரசிகர்கள். இதில், திரைப்பட வசனங்களில் மட்டும் குரல் கொடுக்கும் திரைநாயகன் அல்ல- சமூக பிரச்சனைகளுக்கு முதல் குரல் கொடுக்கும் தவிர்க்க முடியாத தலைவன் சூர்யா என அவரது ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.