முந்திரிக்கொட்டை மாதிரி சொல்லிவிட்டார்.. ஸ்டாலினை சாடும் டி.ராஜேந்தர்
மதுரை: திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை மாதிரி செயல்படுவதாகவும், கருணாநிதி என நினைத்துக்கொண்டதாகவும் விமர்சனம் செய்துள்ளார், லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர்.
மதுரை விமான நிலையத்தில் லட்சிய திமுக தலைவரும் நடிகருமான டி.ஆர்.ராஜேந்தர் அளித்த பேட்டி: எந்த அடிப்படையில் பசுமை பட்டாசுகள் உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்? சீன பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட வேண்டும், பட்டாசு தொழிலை நசுக்கி விட வேண்டும் என்பதே நோக்கம்.
இந்த தொழிலுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்தேன். சுறுசுறுப்பாக செயல்படும், குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் என்ன செய்யமுடியும்.
இந்த முறை தீபாவளி அன்று சென்னையில் அதிகமாக பட்டாசுகள் வெடிக்கவில்லை. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கவில்லை என்றால் தீபாவளி என்று எப்படி தெரியும். வெடிகுண்டு எடுத்து செல்வோர்கள் அனைவரையும் விட்டுவிடுகின்றனர். ஆனால் சின்ன குழந்தைகள் வெடிக்கக்கூடிய வெடி வெடித்தால் தவறு என்று கூறுகின்றனர்.
ஆண்டாண்டுகளாக இருக்கக்கூடிய கலாச்சாரத்தில் கை வைப்பது என்பது மிக வேதனை அளிக்கிறது. முத்தலாக் சட்டத்தை எதிர்த்து அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். முதுகெலும்போடு பேச வேண்டிய விஷயத்தை பேசியாக வேண்டும். தற்போது அதிமுக பேச ஆரம்பித்துள்ளது.
பாஜக தமிழ்நாட்டில் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைக்கட்டும். முந்திரி கொட்டையாக திமுக தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று கூறிவிட்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்கத்து மாநில முதல்வர் கூட அதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
மம்தா பானர்ஜியும் தற்போதுவரை ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை.
வடமாநிலத்தில் உள்ளவர்கள் கூறுவதற்கு முன் இங்கு உள்ள திமுக தலைவர் கூறியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தன்னை கருணாநிதியாக நினைத்துக் கொண்டு கருணாநிதி அறிவிப்பது போல அறிவித்து வருகிறார். சோனியா காந்தி, ராகுல் காந்தி முன்பு முன்மொழிந்ததை இவர் வழிமொழிந்தாரா?
திமுக-காங்கிரஸ் கூட்டணி என்று தற்போது கூறிவிட்டார். இதனால் அதிமுக சரியான வியூகம் வகுக்கவேண்டும். அதிமுகவில் இரு அணிகளாக பிரிந்து இருக்கலாம், ஆனால் ஒருவர் கூட திமுக பக்கம் செல்லவில்லை. மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு யாராலும் தடுக்க முடியாது. ஜல்லிக்கட்டு அரசாணை வெளியிட்டதற்காக அதிமுகவுக்கு லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.