பெரிய ஆறு.. சுயமரியாதைக்காக போராடினாரு.. சொக்காயை போட்டுட்டு பேசறான் இந்த டிஆரு.. டி.ஆர் டாப் டக்கரு
ரஜினி - பெரியார் விவகாரம் குறித்து டி.ராஜேந்தர் பேட்டி அளித்துள்ளார்
மதுரை: "தந்தை பெரியார் வற்றாத ஒரு பெரிய ஆறு.. சுயமரியாதைக்காக போராடினாரு.. அதனாலதான் சுயமரியாதை சொக்காயை போட்டுட்டு பேசறான் இந்த டிஆரு.. 1971 மேட்டரை எடுத்து வச்சு நீங்க பண்ணுங்க விவாதம்.. எனக்கில்லை பிரதானம்.. 5ம் வகுப்பு பொதுத்தேர்தல் குறித்து நடத்துங்க விவாதம்" என்று சகலகலா கலைஞரும், அரசியல்கட்சி தலைவருமான டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகரும், லட்சிய திமுக நிறுவன தலைவருமான டி.ராஜேந்தர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சினிமா டிக்கெட் கட்டணம் உள்பட ரஜினி விவகாரம் வரை விரிவாக பேசினார்.. மேலும் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்தல் என்பதை கடுமையாக எதிர்த்தார்.. இது சம்பந்தமாக அவர் பேசியதாவது:
"தியேட்டருக்கு அன்னைக்கு மக்கள் ஜேஜேன்னு வந்திட்டு இருந்தாங்க.. ஆனா இன்னைக்கு வரல... காரணம் டிக்கட் கட்டணம்! என்னைக்கு எவ்ளோ ரூபாய்க்கு டிக்கட் விற்பாங்கன்னு யாருக்குமே தெரியாது.. இன்னைக்கு டிக்கட் எவ்வளவு ரூபாய்-ன்னு தெரியாமலேயே போனால், மக்கள் எப்படி படம் பார்க்க தியேட்டருக்கு வருவாங்க?
கட்டணம்
பேட்டா செருப்பு வாங்க போனால், இதுதான் விலைன்னு இருக்கு.. பிஎஸ்சி செருப்பு வாங்கப்போனால் இதுதான் விலைன்னு இருக்கு.. இந்த பஸ்ஸில் ஏறி, அங்க இறங்கினால் அதற்கு டிக்கெட் ரேட் நிர்ணயிக்கப்பட்டு இருக்கு.. ஆனால் தியேட்டருக்கு மட்டும் நிர்ணயிக்கப்பட்ட ரேட்டு இல்லை.. 10 ரூபாய் பாப்கார்னை 100 ரூபாய்க்கு விக்கறாங்கன்னா எப்படிங்க? குடும்பம் என்னாகும்? ஒவ்வொரு நடிகருக்கும் அத்தனை கோடி? ஆனா அந்த படத்தை விலை கொடுத்து வாங்கிற விநியோகஸ்தர் தெருகோடி?
லோக்கல் பாடி டாக்ஸ்
ஜிஎஸ்டிதான் இருக்கே, அப்பறம் எதுக்கு லோக்கல் பாடி டாக்ஸ்? கேளிக்கை வரியை நீக்காவிட்டால், எங்களுடைய திரைப்பட விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் கலந்தாலோசித்துவிட்டு பெரிய போராட்டம் செய்யலாம்னு இருக்கோம். ஆனால், எடுத்ததுமே போராட்டம் என்று சொல்வதைவிட மாண்புமிகு தமிழக முதல்வரையும் அமைச்சர் பெருமக்களையும் சந்திக்க முயற்சி செய்து என் கோரிக்கை குறித்து பேசுவேன்" என்றார்.
பெரியார்
இதையடுத்து ரஜினி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "லட்சிய திமுக பத்தி கேட்டால் நான் பதில் சொல்வேன்.. ஆனால் எனக்குன்னு இன்னைக்கு சில பொறுப்பு இருக்கு.. அதனால கேட்ககூடிய கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொன்னது ஒரு காலம். திரையுலகில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தலைவர் மட்டுமில்லை.. தமிழ்நாடு விநியோகஸ்தரின் கூட்டமைப்பிலும் பொறுப்பில் உள்ளேன்..
கொடி
டி.ராஜேந்தர் இதுவரைக்கும் சத்ரியனாக இருந்தது எல்லாம் போதும்.. இனி ஒரு சாணக்கியத்தனமா பதில் சொல்லணும்.. டி.ராஜேந்தர் வேகப்பட்டது எல்லாம் போதும்.. கொஞ்சம் விவேகமா பதில் சொல்லணும்னு நினைக்கிறேன். ரஜினிகாந்த் என் நண்பர்.. அவர் ஏதாவது கட்சி ஆரம்பிச்சிட்டாரா, அவர் ஏதாவது கொடியை கொண்டு வந்துட்டாரா? அவர் இன்னும் வரல.. வரட்டும் அப்பறமா பேசறேன்.. அவர் 1971-ல் நடந்த ஒரு மேட்டரை இன்னைக்கு 2020-ல் எடுத்து வச்சிட்டு, ரஜினி சார் பேசிட்டாருன்றதுக்காக நீங்க கேள்வி கேட்டால், அதை பத்தி நான் பேச விரும்பல விவாதம்.
விவாதம்
என்னை பொறுத்தவரை, 5-ம் கிளாசுக்கு பொதுத்தேர்வு, 8-ம் கிளாசுக்கு பொதுத்தேர்வு என்றால் அதை பற்றி பேசுவதுதான் எனக்கு பிரதானம்.. நீங்க விவாதம் பண்ணிக்குங்க.. ஈரோட்டு தந்தை பெரியார் ஒரு வற்றாத ஒரு பெரிய ஆறு.. சுயமரியாதைக்காக போராடினாரு.. அதனாலதான் சுயமரியாதை சொக்காயை போட்டுட்டு பேசிறான் டிஆரு.. கடவுள் இல்லை என்று சொன்னவர் பெரியார்.. கடவுள் நம்பிக்கை உள்ளவன் டிஆரு.. அது வேற விஷயம்.. ஆனால் சுயமரியாதையை பெற்று தந்தது ஈரோட்டு தந்தை பெரியார்தான்.. அதில் மாறுபட்ட கருத்தே இல்லை.
காமராஜர்
விருதுநகர் பெற்று தந்த கருப்பு வைரம், படிக்காத மேதை காமராஜர் ஐயா தந்த இலவச கல்வியை படிச்சுட்டு வந்தவன் நான்.. அதுலதான் நான் எம்ஏ, எம்எச்டி படிச்சிட்டு வந்திருக்கிறேன்.. ஒரு பள்ளிக்கூடத்துல வாத்தியாரா போகக்கூடிய அளவுக்கு நான் உயர்ந்திருக்கிறேன்னா, அந்த படிப்புக்கு காமராஜர் ஐயாதான் காரணம்.. அவர் பிறந்த இந்த மண்ணில் இப்படியா?
ஆன்மீகம்
ஆன்மீகமும் தேசியமும் தன் இரண்டுமே கண்கள் என்று சொன்ன முத்துராமலிங்க தேவர் ஐயா பிறந்த இந்த மண்ணில் இந்த நிலையா? கடைசிவரை எதுவுமே சேர்த்து வைக்காமல் சென்ற கக்கன் வாழ்ந்த இந்த மண்ணில்.. முதலமைச்சராகவே இருந்தாலும் தன் வீட்டில் எதுவுமே வெக்காமல் மறைந்து போனாரே அறிஞர் அண்ணா, வாழ்ந்த இந்த நாட்டில் இந்த நிலையா? கல்லா கட்டுறாங்களே யாருவது காமராஜர் மாதிரி அணை கட்டினாங்களா? மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து ஏழை வீட்டு பிள்ளை படிக்கணும்னு பாடுபட்டார் காமராஜர்! ஆனால் 5ம், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்றால் பாதிக்கப்படுவது யார்? நம்ம அடித்தள, நடுத்தர மக்கள்தான்!
பாவப்பட்ட மக்கள்
அப்படின்னா ஏழை வீட்டு புள்ளைங்க எல்லாம் படிக்க கூடாதா? நடுத்தர வீட்டு புள்ளைங்க எல்லாம் படிக்க கூடாதா? இதுக்கு கொண்டு வருவாங்க ஒரு சட்டம்.. இதுக்கு கொண்டு வருவாங்க ஒரு திட்டம்.. அதுக்கு ஆதரிச்சு பேசுவாங்க.. ஆனா இதை பத்தி யாருமே விவாதம் பண்ண மாட்டாங்க.. தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, தன் குழந்தைங்க படிக்கணும்னு ஒவ்வொரு ஏழையும் நினைக்கிறான்.. இதை பத்தியெல்லாம் விவாதம் பண்ணாம, 1971 மேட்டரை எடுத்து வச்சு பண்ணுங்க விவாதம்.. எனக்கில்லை பிரதானம்.. நான் மக்கள் பிரச்சனைக்குதான்ய்யா குரல் கொடுப்பேன்.. நான் பதவிக்காக அரசியலுக்கு வந்தவன் இல்லை.. நான் பாவப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க வந்த லட்சியத்தை கொண்டவன்" என்றார்.