ரயில் பெட்டிகளில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை எடுங்கள்.. தென்னக ரயில்வேக்கு நீதிமன்றம் உத்தரவு
மதுரை: திருச்சி ரயில்வே காவல்துறையை சேர்ந்த வினோத் என்பவர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பணியில் இருந்த போது, பெண் பயணி ஒருவரிடம் வரம்பு மீறி பேசியதாக புகார் எழுந்தது.
கடந்த 2015-ம் ஆண்டு நிகழ்ந்த இச்சம்பவத்திற்காக வினோத் அப்போதே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி, வினோத் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், குற்றம்சாட்டப்பட்டவருடன் சம்பவத்தின் போது பணியாற்றிய பெண் காவலரும் வினோத் மது அருந்தியிருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பெண் பயணியிடம் வரம்பு மீறி பேசியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது என்றார் நீதிபதி. மேலும் வினோத் மீது துறைரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், இது நீதிமன்றத்திற்கு வேதனையளிப்பதாக உள்ளது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பெண் பயணியிடம் வரம்பு மீறிய வினோத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பெண்கள் தனியே பயணிப்பது இயல்பாக நடைபெறும் நிகழ்வாக உள்ள இந்த காலக்கட்டத்தில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.சில நாடுகளில் பஸ்கள், ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பயணிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.
அது போன்ற கொள்கை தென்னக ரயில்வேயிலும் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம். ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தால், இதுபோன்ற புகார்கள் எழும்போது அதனை உறுதி செய்ய உதவும் என குறிப்பிட்டார் நீதிபதி.
எனவே ரயில்களில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோா் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில் கோச்கள் மற்றும் கம்பார்ட்மெண்டுகளில், சிசிவிடி பொருத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக ஓடும் ரயில்களில் பணிபுரியும் காவலர்களுக்கு, உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே, விரைவாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார் நீதிபதி சுப்பிரமணியம்.