வேளாண் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு - மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேளாண் சட்ட நகலை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்த விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்த
மதுரை: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மொட்டை அடித்தும் கைகளில் கட்டுப்போட்டும் போராடிய விவசாயிகள் வேளாண் சட்ட நகலை எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மறியல் செய்த விவசாயிகளை கைது செய்த காவல்துறையினர் சில மணி நேரங்களில் விடுதலை செய்தனர்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் திருத்த சட்ட மசோதாக்களை எதிர்த்து நாடெங்கிலும் விவசாயிகள் அமைப்பின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நகலை கிழித்து விருதுநகரில் 50க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
விவசாயிகளை பாதிக்கும் வேளாண் திருத்த சட்டத்திற்கு தமிழக அரசும் துணை போவதாக கூறிய விவசாயிகள் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் நாட்டின் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி விருதுநகர் மதுரை சாலையில் 100 மேற்பட்ட விவசாயிகள் வேளாண் திருத்த சட்ட நகலை கிழித்து எறிந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் செய்த விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
என் உயிர் பிரிந்தால்.. 15 ஆண்டுக்கு முன்பே கடைசி ஆசையை கூறிய எஸ்பிபி.. எல்லாபுரம் கவுன்சிலர் தகவல்
குமரி விவசாயிகள் மறியல்
கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவிலில் விவசாயிகள் சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை ஒட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
போராடிய விவசாயிகள் கைது
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நகலை எரித்து விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மத்திய அரசு விவசாயக் கொள்கையை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 33 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்
விழுப்புரத்தில் கைது
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 130 விவசாயிகள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
விவசாயிகள் கைதாகி விடுதலை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.
மொட்டை அடித்து போராட்டம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி, விவசாயிகள் சங்கங்கள் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் இன்றைய நிலையை சித்தரிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நிர்வாகி செங்குட்டுவன் என்பவர் தனது தலையை மொட்டை அடித்து உடல் முழுவதும் விபத்தால் ஏற்பட்ட காயத்துக்கு கட்டு போட்டதைப் போல் வேடமணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரத்தில் மறியல்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அனைத்து கட்சியின் சார்பில் மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது இந்த மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுக, விடுதலை சிறுத்தை முஸ்லிம் அமைப்புகள் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்தும் இந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.