அசாம் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம் - மதுரைக்கு உடல் கொண்டு வரப்படுகிறது
அசாமில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: அசாம் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக ராணுவ வீரர் கதிர்வேல் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மகாராஷ்டிரா, கோவாவில் கனமழையின் தீவிரத்தால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 136 பேர் வரைக்கு உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கியிருப்போரை 30க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர்.
அசாம் மாநிலத்தில் பலத்த மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். அவரது பெயர் கதிர்வேல் என்று தெரியவந்துள்ளது.
இவர் மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மரணமடைந்த ராணுவ வீரர் கதிர்வேலின் உடல் விமானம் மூலம் இன்று இரவு மதுரைக்கு கொண்டு வரப்பட உள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த கதிர்வேலின் குடும்பத்தினருக்கு உறவினர்களும் அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.