காளையை அடக்கினால் ஜாக்பாட்! ஜல்லிக்கட்டில் வென்றால் அரசு வேலை?என்ன சொல்கிறார் அமைச்சர்-முக்கிய தகவல்
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் நபர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி முக்கிய தகவலைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தமிழர் திருநாளும் பொங்கல் விழா 3 நாட்கள் உற்சாகமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2 நாட்களாகப் பொங்கல், மாட்டுப் பொங்கல் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் விழாவின் போது தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
'நீங்கள் இறந்துவிடுவீர்கள்'.. போலீசை சாபமிட்டதால் வந்த வினை.. மற்றொரு சாமியார் கைதின் பின்னணி
ஜல்லிக்கட்டு
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்பதில் முதலில் சற்று சந்தேகம் இருந்தது. இருப்பினும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மாடுபிடி வீரர்கள் கட்டாயம் 2 டோஸ் வேக்சின் செலுத்தி இருக்க வேண்டும், வெளியூர் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பாலமேடு
அதன்படி மாட்டுப் பொங்கல் நாளான நேற்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. காலை தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை சுமார் 5.30 மணி வரை நடந்தது. இதில் சுமார் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் 2 போலீசார் உட்பட்ட மொத்தம் 36 பேர் காயமடைந்தனர். அதேபோல ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
கோரிக்கை
இந்தப் போட்டியில் மொத்தம் 31 காளைகளைப் பிடித்த மதுரை மாவட்டம் பொதும்பை கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் முதல் இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே கடந்த 2020ஆம் ஆண்டிலும் முதல் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி கடுமையாக இருந்ததாகத் தெரிவித்த பிரபாகரன் நண்பர்கள் தந்த ஊக்கத்தால் அதிக மாடுகளைப் பிடிக்க முடிந்தது எனத் தெரிவித்தார். மேலும், ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அமைச்சர் மூர்த்தி
பாலமேட்டில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி நேரில் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டி முடியும் வரை அங்கேயே இருந்த அவர், சிறப்பாகக் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், சிறந்த மாடுகளுக்கும் பரிசுகளை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் மனநிறைவு அடையும் வகையில் பாலமேடு ஜல்லிக்கட்டு நடந்து முடிந்துள்ளது.
முக்கிய தகவல்
எந்தவொரு முறைகேடும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதேபோல ஜன. 17இல் அலங்காநல்லூரிலும் முறைகேடுகள் இல்லாமல் போட்டிகள் நடக்கும். சீருடை மாற்றி முறைகேட்டில் ஈடுபடும் வீரர்கள், மற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இது தொடர்பாக முதலமைச்சர் தகுந்த நேரத்தில் முடிவு எடுப்பார்" என்றார்.