96ல் 91 வட இந்தியர்கள்.. தென்னக ரயில்வே பணியில் தமிழர்கள் புறக்கணிப்பு.. வெங்கடேசன் எம்.பி. புகார்
மதுரை: 96 தென்னக ரயில்வே பணியிடங்களுக்கு 91 வட இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்றும், தென்னக ரயில்வே பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் மதுரை எம்பி வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று சு.வெங்கடேசன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''தென்னக ரயில்வேயில் சரக்கு வண்டியின் பாதுகாவலர் பதவிக்கு நடைபெற்ற தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. துறையில் பணியாற்றுகிற சுமார் 5,000 பேர் கலந்துகொண்ட இத்தேர்வில், 96 பேர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் ஐவர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 91 பேரும் வட இந்தியர்கள்.
தேர்வு எழுதியவர்களில் சுமார் 3,000 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அதில் ஐவர் மட்டுமே தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே தென்னக ரயில்வேயில் தமிழர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் இது, தென்னக ரயில்வேவின் தமிழர் விரோதப் போக்கின் மற்றொரு வெளிப்பாடாக உள்ளது.'' இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
முதல் ஆளாக வந்தார்.. கோடி கோடியாக அள்ளிக்கொடுத்தார்.. சுஷாந்த்சிங்கின் அந்த உதவியை மறக்க முடியுமா?