மதுவிற்கு அடிமையானவர்கள் தமிழகத்தில் அதிகம்... நீதிபதிகள் வேதனை
மதுரை: தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டபடி, மூடப்பட்ட மற்றும் மூடப்படவுள்ள டாஸ்மாக் கடைகள் எவை, எவை என்பது குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கறிஞர் செல்வராஜ் என்பவர் திருச்சி மாவட்டம் மணப்பாறை நீதிமன்றம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விளக்கம் அளித்தார். அப்போது, பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்கள் அதிகம் இருப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
இந்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டனர்.
மேலும், பார் உரிமம் டாஸ்மாக் மற்றும் பார்களுக்கு உரிமம் கோரி எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர், உரிமம் வழங்குவதை முறைப்படுத்துவதற்கான விதிகள் என்ன? பார்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்த ஆய்வில் அதிகாரிகள் ஈடுபடுகிறார்ளா என பல்வேறு கேள்விகளை எழுப்பினர். டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்குமாறும் உத்தரவிட்டனர்.