எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மதுரை அருகே பிரமாண்ட கோவில்.. முதல்வர் திறந்து வைத்தார்! குவிந்த தொண்டர்கள்
மதுரை: மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு சிலைகள் அமைக்கப்பட்டு, அவர்களுக்காகவே ஒரு கோவில் மதுரை அருகே அமைக்கப்பட்டுள்ளது.
இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.
மதுரை, திருமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் சுமார் 12 ஏக்கரில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
தமிழக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இப்படி ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக 6 மாதங்களாக காப்பு கட்டி விரதம் இருந்து வந்துள்ளார் ஆர்.பி.உதயகுமார் என்கிறார்கள்.
வெண்கல சிலைகள்
இந்த கோவிலில் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆருக்கு சிலைகள் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் சுமார் 400 கிலோ எடை கொண்டது. முழு உருவ வெண்கல சிலையாக நிறுவப்பட்டு உள்ளன. இந்த கோவிலை அமைக்க ரூ.50 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
கோவில் திறப்பு விழா
இந்த கோவில் திறப்பு விழா இன்று மதியம் 1 மணியளவில் நடைபெற்றது. அதற்காக யாக சாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன. இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திறப்பு விழாவில் பங்கேற்றனர். எடப்பாடி பழனிச்சாமி ரிப்பன் வெட்டி கோவிலை பக்தர்கள் பயன்பாட்டுக்கு முறைப்படி துவங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
சாதனை விளக்கம்
இதன்பிறகு நடைபெறும் கோ பூஜையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். தொடர்ந்து அவர், கட்சியி்ன் மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி பாராட்டுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில் முதல்வர், தமிழக அரசின் சாதனை திட்டங்கள் குறித்து விளக்கி பேச உள்ளார். பின்னர் விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
தியாகத்திற்கு பரிசு
வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறதா என்று நிருபர்கள் கேட்டதற்கு, "எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் நிறைய தியாகம் செய்துள்ளனர், நாங்கள் அவர்களை கடவுள் என்று கருதுகிறோம்" என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
பாசக்காரங்க
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா கடந்த 27ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க ஒரு ரயில் நிறைய ஆட்களை அழைத்துச் சென்றார் அமைச்சர் செல்லூர் ராஜு. மதுரைக்காரங்க பாசக்காரங்க என்று அதற்கு விளக்கமும் கொடுத்தார். இப்போது அதே மதுரை பக்கம், ஜெயலலிதாவுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. தாய் பாசத்தில் எங்கேயோ போய்விட்டார்கள் மதுரை கட்சி பிரபலங்கள் என்கிறார்கள் தொண்டர்கள்.