தமிழ்கடவுள் முருகனுக்கு தைப்பூச திருவிழா: ஜனவரி 30ல் கொடியேற்றம் - பிப்.7ல் தேரோட்டம்
மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில், 4ஆவது படைவீடான சுவாமி மலை சுவாமிநாத சுவாமி கோவிலிலும், 6ஆவது படை வீடான பழமுதிர்ச்சோலை கோவிலிலும் தைப் பூச திருவிழா வரும் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, வரும் ஜனவரி 30ஆம் தேதியன்று கொடியேற்ற வைபவம் நடைபெற உள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை எனும் சோலைமலை ஆகிய கோவில்களில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வாடிக்கை. தமிழ் மாதப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, சூரசம்ஹாரம், தைப்பூசம், பங்குனி உத்திரம் என மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெறும்.
தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற விஷேச நாட்களில் அறுபடை வீடுகளில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர், பழனி ஆகிய கோவில்களுக்கு தமிழகம் முழுவதும், லட்சக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தும், காவடி எடுத்து வந்தும் முருகனை தரிசித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவதுண்டு. குறிப்பாக தைப்பூச திருவிழாவை காண்பதற்காகவே லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை வந்து முருகனை தரிசித்து செல்வதுண்டு.
சுவாமிமலை முருகன்
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகே உள்ளது சுவாமி மலை சுவாமிநாத சுவாமி கோவில். அறுபடை வீடுகளில் 4ஆவது படை வீடாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வரும் பிப்ரவரி 8ஆம் நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு வரும் ஜனவரி 30ஆம் தேதியன்று சுவாமி மலை கோவிலில் கொடியேற்ற வைபவம் நடைபெற இருக்கிறது. கொடியேற்ற வைபவம் முடிந்த உடன், சுவாமிநாத சுவாமி, விக்னேஸ்வரர், சண்டிகேஸ்வரருடன் மலைக் கோவிலில் இருந்து புறப்பட்டு உற்சவ மண்டபத்தில் எழுந்தருளுகிறார். இரவில் உற்சவரின் சுவாமி வீதியுலா வைபவமும் நடைபெறுகிறது.
தைப்பூச தேரோட்டம்
விழாவில் முக்கிய நிகழ்வாக பிப்ரவரி 7ஆம் தேதியன்று தேரோட்ட வைபவம் நடைபெறுகிறது. தைப் பூச திருவிழா நாளான 8ஆம் தேதியன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறும். அதைத் தொடர்ந்து சுவாமிநாத சுவாமிக்கு வைரவேல், வைர கிரீடம், தங்க கவசத்துடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமிநாத சுவாமி வீதியுலாவும், காவிரிக்கரையில் தீர்த்தவாரியும் நடைபெறும். பிப்ரவரி 9ஆம் தேதியன்று சுவாமிநாத சுவாமி மீண்டும் மலைக் கோவிலுக்கு திரும்பும் வைபவமும் நடைபெறும்.
பழமுதிர்சோலை முருகன்
அதே போல், மதுரை மாவட்டத்தில், அழகர் மலையில் உள்ளது முருகனின் 6ஆவது படைவீடான சோலைமலை எனப்படும் பழமுதிர்ச்சோலை கோவில். முருகப்பெருமான், ஔவையாருக்கு சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு காட்சி கொடுத்த புகழ் வாய்ந்த கோவில். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா தனிச் சிறப்புடையது. இங்கு தைப்பூச திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வரும் 30ஆம் தேதி காலை 10. 30 மணிக்கு மங்கள இசையோடு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 11 மணிக்கு சிம்மாசனத்தில் புறப்பாடும், மாலை 5 மணிக்கு யாக சாலை பூஜைகளும், மாலை 6 மணிக்கு பூத வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து ஜனவரி 31ஆம் தேதியன்று, காலை 9 மணிக்கு யாக சாலை பூஜையும், மஹா அபிஷேகமும், யாகசாலை பூஜைகளும், மாலை 6 மணிக்கு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு வைபவமும் நடைபெறும். பிப்ரவரி 1ஆம் தேதியன்று வழக்கமான பூஜைகளும் மாலை 6 மணிக்கு காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். பிப்ரவரி 2ஆம் தேதியன்று மாலை 6 மணிக்கு ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், பிப்ரவரி 3ஆம் தேதியன்று மாலை 6 மணிக்கு பூஞ்சப்பர விழாவும், 4ஆம் தேதியன்று மாலை 6 மணிக்கு யானை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு வைபவம் நடைபெறும். 5ஆம் தேதியன்று மாலை பல்லக்கு வாகனத்திலும், 6ஆம் தேதியன்று மாலையில் குதிரை வாகனத்திலும் சாமி புறப்பாடு வைபவம் நடைபெறும்.
பிப்ரவரி 7ஆம் தேதியன்று காலை 10.30 மணிக்கு தேரோட்ட வைபவமும், மாலை 6 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு வைபவமும் நடைபெறும். முக்கிய நிகழ்வாக பிப்ரவரி 8ஆம் தேதியன்று காலையில் யாகசாலை பூஜைகளும், தீர்த்தவாரி நிகழ்ச்சியும், முற்பகல் 11 மணியளவில் உற்சவ மூர்த்திக்கு மஹா அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெறும். மாலை 6 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும், இருப்பிடம் சேரும் வைபவமும் நடைபெறும்.