மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தைப்பூசம் தெப்பத்திருவிழா - முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடக்கம்
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் முக்கிய திருவிழாவான தெப்பத் திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை: தைப்பூசத் திருவிழாவிற்காக தெப்பக்குளத்தில் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க முகூர்த்த காலுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்து தெப்பக்குளத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். அதற்காக ஒவ்வொரு வருடமும் வைகை ஆற்றிலிருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் நிரப்பப்படும்.
கடந்த சில வருடங்களாக தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் நிலை தெப்பத்தில் இருந்தபடியே காட்சி அளித்தனர். அதன் பின்னர் இந்த ஆண்டு தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கால்வாய்கள் புனரமைக்கப்பட்டு வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை மூலம் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு அங்கிருந்து பனையூர் கால்வாய் மூலம் தெப்பக்குளத்தில் முழு கொள்ளளவை எட்டும் வகையில் முழுமையாக தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.
இந்த மாதம் 28ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது. சனிக்கிழமை தெப்பக்குளத்தில் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மீனாட்சி அம்மன் திருக்கோவில் இணைஆணையர் செல்லத்துரை தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க முகூர்த்த காலுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்து தெப்பக்குளத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
தெப்பத்திருவிழாவையொட்டி கொடியேற்றப்பட்ட பின்னர் காலை, இரவு என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். விழாவின் 6ஆம் நாள் திருஞானசம்பந்தரின் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 8-ஆம் நாள் மச்சகந்தியார் திருமண காட்சியும் நடைபெறும். 10-ஆம் நாள் தெப்பம் முட்டுத்தள்ளுதலும், 11ஆம் நாள் அனுப்பானடியில் கதிரறுப்பு திருவிழாவும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு, தெப்பக்குளம் சென்று அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளுவார்கள். பின்னர் பக்தர்கள் அங்கு வடம் பிடித்து இழுத்து தெப்பத்தை 2 முறை வலம் வருவார்கள். பின்னர் சுவாமி மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளி, அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
அதை தொடர்ந்து இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை வலம் வருவார். இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடுவார்கள். மேலும் தெப்பத்திருவிழாவையொட்டி அன்றைய தினம் கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும்.