பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தே தீரும்.. அப்படி வைக்காவிட்டால் ஜெயில் உறுதி- தங்கதமிழ்ச் செல்வன்
மதுரை: பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் சிறைக்கு செல்ல வேண்டும் என்ற அச்சத்தில் அதிமுகவினர் உள்ளனர் தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
திருமலை நாயக்கரின் 436-ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள திருமலை நாயக்கர் சிலைக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கதமிழ்ச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமமுக கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசுகையில் : அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை சொல்ல கூடிய கருத்து அதிமுகவின் கருத்து இல்லை என்பது வேடிக்கையானது.
சிறைக்கு செல்வர்
அதிமுக பாஜகவோடு கூட்டணி வைக்கவில்லை என்றால் அமைச்சர்கள் அனைவரும் சிறைக்கு போவோம் என்ற அச்சத்தில் உள்ளதால் நிச்சயம் பாஜகவோடு கூட்டணி வைப்பார்கள். தலைமை செயலகத்தில் யாகம் வளர்த்தது கண்டிக்கதக்கது.
டிடிவி தினகரன்
ஓபிஎஸ் தனது பதவியை காப்பாற்றுவதற்காக எந்த இடத்திலும் யாகம் செய்வார். திருவாரூர் தேர்தல் நடத்தி இருந்தால் தமிழகத்தில் யாருடைய பலம் என்பதை நிருபித்திருக்கலாம். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 26-ஆம் தேதி வரை காலம் இருப்பதால் டிடிவி தினகரனுடன் கலந்து உரிய முடிவு எடுக்கப்படும்.
முதல்வராக தொடர
கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் ஈபிஎஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தற்காலிக முதல்வர் நியமித்து விசாரணை முடிந்து தான் கொலையில் தொடர்பு இல்லை என்பதை நிரூபித்துவிட்டு முதல்வராக தொடரவேண்டும்.
கர்நாடக சிறை
ஜெயலலிதாவின் கொடநாடு வீட்டில் கொலை, கொள்ளை நடத்திருப்பது ஏற்க முடியாதது. இதில் யார் தொடர்புடையதாக இருந்தாலும் மன்னிக்க முடியாதது. சசிகலாவிற்கு கர்நாடக சிறையில் வசதி ஏற்படுத்தியதாக கூறுவது முட்டாள்தனம்.
நல்லாட்சி
எங்களை பழிவாங்கும் நோக்கத்தோடு பரப்பப்படுகிறது. ஊடகங்களும் இதனை பெரிதாக்குகின்றனர். பாஜகவின் எத்தனையோ மிரட்டல்களை பார்த்துவிட்டோம். பாஜக என்ன மிரட்டினாலும் அமமுக பயப்படாது, வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றபெற்று மக்களுக்கான நல்லாட்சியை பெற்று மக்களின் நலனுக்காக அமமுக குரல் கொடுக்கும் என்றார்.