ஊருக்காக மாதம் ரூ.200 ஒதுக்கும் இளைஞர்கள்... முன் மாதிரி கிராமமாக திகழும் தனியாமங்கலம்..!
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தனியாமங்கலம் என்ற கிராமம் மற்ற கிராமங்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறது.
அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் பட்டாளம் 'ரீ ஷேப் தனியாமங்கலம்' என்ற பெயரில் குழுவை உருவாக்கி அதன் மூலம் ஊர் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
மரம் நடுதல், சிசிடிவி கேமரா பொருத்துதல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் என ஊர் முன்னேற்றத்துக்கான பணிகளை தனியாமங்கலம் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.
மேலூர் வட்டம்
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் இருக்கிறது தனியாமங்கலம் என்ற கிராமம். அங்கு சுமார் 3,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான இளைஞர்கள் துபாய், சிங்கப்பூர், கத்தார், குவைத் என வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். கடல் கடந்து பணியாற்றினாலும் அவர்களுக்கு ஊர் மீதான பாசம் விட்டுப்போகவில்லை.
மாதம் ரூ.200
ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் இருந்த அதீபன் குமார் என்பவர் 'ரீ ஷேப் தனியாமங்கலம்' என்ற பெயரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் வாட்ஸ் அப் குழுவை தொடங்கி அதன் மூலம் ஊர் முன்னேற்றம் குறித்து விவாதிக்கத் தொடங்கினார். வாரந்தோறும், மாதந்தோறும் ஊருக்கு என்ன செய்யலாம் எனக் கூடிப்பேசிய அந்தக் குழு தங்கள் ஊதியத்தில் இருந்து ஊருக்காக மாதம் ரூ.200 கொடுப்பது என முடிவெடுத்தது.
சமூக அக்கறை
அதனடிப்படையில் 'ரீ ஷேப் தனியாமங்கலம்'என்ற குழுவில் உறுப்பினர்களாக உள்ள 88 பேரும் மாதந்தோறும் ஊருக்காக ரூ.200 கொடுத்து வருகின்றனர். அந்த தொகையை கொண்டு ஊரை சுற்றி மரம் நடுவது, கண்மாய் தூர்வாருவது, குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் 10 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தியது, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது என அந்த குழு செயல்பட்டு வருகிறது.
முன் மாதிரி கிராமம்
'ரீ ஷேப் தனியாமங்கலம்' என்ற பெயரில் இளைஞர்கள் குழு மேற்கொண்டு வரும் இந்தப் பணிகளுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இதனிடையே இது தொடர்பாக நம்மிடம் பேசிய தனியாமங்கலத்தை சேர்ந்த அதீபன் குமார்,'' பொறியாளராக நான் துபாயில் பணியாற்றி வந்தேன். கொரோனா தாக்கத்தால் ஊர் திரும்பிவிட்டேன். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஊரின் நலன் நாடி இந்த குழுவை தொடங்கினேன். எல்லாம் நல்ல படியாக செல்கிறது'' என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஒவ்வொரு பணிக்கும் அரசின் தயவை எதிர்பார்த்து காத்திருக்கும் பல கிராமங்களுக்கு மத்தியில் தனியாமங்கலம் ஒரு முன் மாதிரி கிராமமாக திகழ்கிறது.