கஜா நிவாரண நிதியை தர மத்திய அரசு மறுக்கிறது.. மதுரை ஹைகோர்ட்டில் தமிழக அரசு குற்றச்சாட்டு
மதுரை: மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான அளவு நிதி இருந்தும் கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு நிதி தர மறுப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு குற்றஞ்சாட்டி உள்ளது.
கஜா புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தென்னை ஒவ்வொன்றுக்கும் ரூ.50 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டு, மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதே போல் ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன், முருகேசன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளையும் ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய குழு தனது இறுதி அறிக்கையை சமர்பிப்பது எப்போது? என்று கேள்வி எழுப்பி இருந்தது.
இந்தநிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான அளவு நிதி இருந்தும் கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு தரவில்லை என்று மத்திய அரசு தமிழக அரசு குற்றம்சாட்டி உள்ளது.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான அளவு நிதி இருந்தும் கஜாவிற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
மாநில அரசு போதிய விளக்கங்களை தர தவறியதால் நிவாரணம் வழங்க கால தாமதம் ஆகிறது என்று இதில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதில் மத்திய குழுவின் இறுதி அறிக்கை அடிப்படையிலேயே தமிழகத்துக்கு கஜா புயல் நிவாரண நிதி அளிக்க முடியும், மத்தியக்குழு அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.