எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று ஆஜராக வேண்டும்… மதுரை ஹைகோர்ட் உத்தரவு
மதுரை:எச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண், வரும் திங்களன்று மாலை 4 மணிக்கு நீதிபதிகள் அறையில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தூர் அரசு மருத்து வமனையில் கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி கர்ப்பிணி ஒருவருக்கு எச்ஐவி தொற்று இருந்த ரத்தம் ரத்த வங்கி ஊழியர்களின் கவனக் குறைவால் செலுத்தப்பட்டது. தமிழகத்தில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, தமக்கு எச்ஐவி தொற்று இருப் பது தெரியாமல், கமுதியைச் சேர்ந்த இளைஞர் ரத்த தானம் செய்திருந்தார். அதனால், ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிறப்பாக செயல்படும் முதல்வர்கள் யார்..? சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், எடப்பாடி பழனிசாமி லாஸ்ட்
பெண் குழந்தை பிறந்தது
எச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி, மதுரை அரசு மருத்துவ மனையில் சீமாங் மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
பொதுநல வழக்கு தாக்கல்
இந் நிலையில், மதுரையை சேர்ந்த அப்பாசாமி, முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தனர்.
ரத்ததானம்
அந்த பொதுநல வழக்கில் கூறப்பட்டு இருந்ததாவது: அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் ரத்தம் தானமாக பெறப்படுகிறது. அந்த ரத்தம் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய இயக்குநரின் கண்காணிப்பின் கீழ் முறையாக பரிசோதிக்கப் பட்டு தானமாக பெறப்பட வேண்டும்.
காலி பணியிடங்கள்
ஆனால், அதற்கான அலுவலர் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. எனவே அந்த பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.
ஆஜராக உத்தரவு
அந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணிற்கு முறையாக சிகிச்சை வழங்கப்பட்டதா? அதற்கான உபகரணங்கள் அனைத்தும் போதுமான அளவில் உள்ளதா? என்பது குறித்து அறிய எச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணை வருகிற திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நீதிபதிகள் அறையில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.