தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரிக்கனும்... ஐகோர்ட்டு அதிரடி!
மதுரை: தமிழகத்தில் யானைகள் இறப்பது தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
யானைகளைப் பாதுகாப்பது நமது கடமை என்று ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தமிழகக் காடுகளில் விலங்குகளைக் கொன்று உடலைக் கடத்துவது குறித்து சி.பி.ஐ. (அல்லது) சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் என்பவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- யானை மிகவும் முக்கியமான உயிரினம்; சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. யானை வேட்டையில் தொடர்புடையவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் உள்ளனர்.
யானைகள் இறப்பு விவகாரத்தில் தமிழகத்தைத் தாண்டிய விசாரணை என்பது அவசியமாகிறது.
யானை இறப்பு விவகாரத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடுவது ஏற்கத் தக்கதல்ல; யானைகளைப் பாதுகாப்பது நமது கடமை. எனவே தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நீதிபத்திகள் உத்தரவிட்டனர்.