தஞ்சை பள்ளி மாணவியின் வீடியோவை எடுத்த.. முத்துவேல் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆஜர்! போலீஸ் திட்டம் என்ன
மதுரை: சென்னை ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டதைத் தொடர்ந்து தஞ்சை பள்ளி மாணவியின் வீடியோவை பதிவு செய்த முத்துவேல் என்பவர் விசாரணைக்காக வல்லம் எஸ்பி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
தஞ்சை மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் கிறிஸ்துவ பள்ளியில் அரியலூர் வடுகர் பாளையத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் படித்து வந்தார்.
பள்ளிக்கு அருகே இருந்த விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி ஜன. முதல் வாரம் விஷம் அறிந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படவே கடந்த ஜன. 9ஆம் தேதி மாணவியைப் பெற்றோர் சொந்த ஊர் அழைத்துச் சென்றனர்.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை.. வள்ளுவர் கோட்டத்தில் பாஜக உண்ணாவிரத போராட்டம்.. போலீஸ் குவிப்பு

மாணவி உயிரிழப்பு
அங்கு அவருக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது. அப்போது தான் மாணவி தான் பூச்சி மருந்து உட்கொண்டதைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர், அவரை உடனடியாக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சூழலில் மாணவியைப் பள்ளி நிர்வாகம் மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியாக புகார்கள் எழுந்தன. அதாவது 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை மதமாறும்படி பள்ளியில் கட்டாயப்படுத்தியதாகவும் அதற்குத் தான் ஒத்துக் கொள்ளாததால் தன்னிடம் அதிக வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாக அந்த மாணவி பேசும் வீடியோ இணையத்தில் வெளியானது.

வழக்கு
இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி கடந்த ஜனவரி 19ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி மாணவியின் தந்தை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

உத்தரவு
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, மதுரைக்கிளை நீதிபதி, தஞ்சை பள்ளி மாணவியின் வீடியோவை பதிவு செய்த முத்துவேல் என்ற நபரை வல்லம் கேம்ப் எஸ்பி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார். மேலும், உண்மைத்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, வீடியோ எடுத்த செல்போனை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

ஆஜர்
இந்தச் சூழலில் ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவின் படி முத்துவேல் இன்று காலை வல்லம் கேம்ப் எஸ்பி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அதேபோல தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோரும் ஆஜராகினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். மேலும், செல்போன் மற்றும் வீடியோவை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் அலுவலகத்திற்கு அனுப்பவும் நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.