மதுரையில் கொரோனாவால் இறந்தவர் வாழ்ந்த தெருவுக்கு சீல்.. தெருவாசிகளும் தனிமை
மதுரை: மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர் வசித்த தெருவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு அந்த தெருவுக்குள் நுழைவோர் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்து வருகிறார்கள்.
ஈரோட்டில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் 3 தாய்லாந்து நாட்டினரிடம் இருந்து மதுரையைச் சேர்ந்த 54 வயது நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் நேற்று முன் தினம் இரவு மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நிலை மோசம்
இதையடுத்து அவருக்கு நேற்று மாலை முதல் உடல்நிலை மோசமானது. அவர் நுரையீரல் அடைப்புக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளார். அது போல் அவருக்கு ரத்தக் கொதிப்பும், சர்க்கரை அளவும் கட்டுப்பாடில்லாமல் இருந்தது.
இறுதிச் சடங்கில் 4 பேர்
இதையடுத்து அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வர மதுரை மருத்துவமனையில் சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது உடலை மதுரையில் உள்ள ஜமாத்தில் வைத்து இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இந்த சடங்குகளில் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
தெருவுக்கு சீல்
இதையடுத்து இறந்த நபர் வசித்து வந்த அண்ணாநகரில் உள்ள தெருவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள எல்லார் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்படுதலுக்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் அந்த தெருவில் உள்ள மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அது போல் அந்த தெருக்குள்ளேயும் யாரும் செல்லக் கூடாது.
கிருமிநாசினிகள்
எனினும் அந்த தெருவுக்குள் செல்ல சிலர் போலீஸாருடன் வாக்குவாதம் நடத்தினர். அப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அவர்கள் கேட்காததால் போலீஸார் தடியடி நடத்தினார். முன்னதாக அந்த தெருவில் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினிகளை தெளித்து சுத்தம் செய்தனர்.