மதுரையில் பயங்கரம்... காவல்நிலையம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை
மதுரை: மதுரையில் காவல்நிலையம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை போலீசார் விரட்டி பிடித்தனர்.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான அஜித் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தங்களது நண்பர் தினேஷ் என்பவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தினேஷின் கைகளை அரிவாளால் வெட்டினர்.
இந்த வழக்கு தொடர்பாக சகோதரர்கள் இருவரும் மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு வருகை தந்த போது காவல்நிலையத்தின் அருகே 200மீட்டர் தொலைவில் கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் திடிரென வந்த மர்ம கும்பல் ஒன்று சகோதரர்கள் இருவரையும் ஓட ஓட விரட்டி தாக்கினர். இதில் படுகாயமடைந்த அஜித் தலையில் பலத்த வெட்டுகாயம் பட்டத்தில் இரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
மேலும் தாக்குதலில் படுகாயமடைந்த ரஞ்சித் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொலை செய்த மர்ம கும்பல் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஆட்டோ ஒன்றில் இரத்தம் கரை படிந்த பட்டா கத்திகளுடன் பதுங்கி இருப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் 5 பேரை விரட்டி பிடித்தனர். கொலை சம்பவம் குறித்தும், பிண்ணனி குறித்தும் தல்லாகுளம் காவல்நிலையம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை கொண்டு போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் காவல்நிலையத்தின் அருகிலேயே நடந்த கொலையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.