அன்று யாசகம்... இன்று டீ விற்பனை... ஆதரவற்றோருக்கு உணவு... கலக்கும் இளைஞர்!!
மதுரை: சென்னைக்கு வந்தால் வேலை கிடைக்கும், வாழ வந்தோரை வாழ வைக்கும் சென்னை என்று கேட்டு இருக்கிறோம். ஆனால், வேலை தேடி சென்னை வந்து கிடைக்காமல் யாசகம் எடுத்து வந்தவர் இன்று டீ விற்று கிடைக்கும் வருமானத்தில் ஆதரவற்றவர்களுக்கும் உணவு வழங்கி பசி ஆற்றி வருகிறார்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் தமிழரசன். பிஎஸ்சி டிகிரி முடித்துள்ளார். இவர் சிறு வயதில் தனது பெற்றோரை இழந்தார். அவரது தந்தையின் நண்பர் ஒருவர் இவரை விருதுநகரில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.
படிப்பை முடித்தவுடன் எப்படியும் சென்னை சென்றால் வேலை கிடைத்துவிடும் என்று கருதி வந்தவருக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. செய்வதறியாமல் திகைத்தவர் சென்னை மெரினாவில் தனது உடமைகளுடன் ஒதுங்கினார். அப்போது அவரது உடைமைகள் மட்டுமின்றி, படித்த சான்றிதழ்ளையும் யாரோ எடுத்துச் சென்றனர்.
அப்பளம் வாங்கலையோ அப்பளம்..கொரோனாவை ஒழிக்குமாம் பாபிஜி அப்பளம்- மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால்
இதனால் மிகவும் கவலைப்பட்டு இருந்த தமிழரசன் சாப்பாட்டுக்கே வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். வழியில்லாமல் மெரினா பீச்சில் யாசகம் எடுத்து பிழைக்கத் துவங்கினார். கிடைத்த காசில் தானும் உணவு வாங்கி சாப்பிட்டு, ஆதரவு இல்லாமல் இருப்பவர்களுக்கும் வாங்கிக் கொடுத்துள்ளார். கொரோனா தொற்று வந்ததால், ஊருக்கும் செல்ல முடியாமல், சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இறுதியில் ஊருக்கு திரும்ப முடிவு எடுத்தவரால், மதுரையை தாண்டி செல்ல முடியவில்லை.
அலங்காநல்லூர் பகுதியில் தங்கினார். சென்னையில் யாசகம் பெற்று கிடைத்த 8000 ரூபாய் அவரிடம் இருந்துள்ளது. அதை வைத்து அங்கு ஒரு வீடு எடுத்து தங்கினார். டீ போட்டு விற்கத் துவங்கினார். தினமும் அவருக்கு 600 முதல் 1000 வரை வருமானம் கிடைக்கத் துவங்கியது. இந்த வருமானத்தில் தனது தேவைகளை பூர்த்தி செய்து, உணவுப் பொருட்கள் வாங்கி பொட்டலங்களாக போட்டு உணவு இன்றி தவித்து வந்தவர்களுக்கு உதவியுள்ளார்.
இதுகுறித்து தமிழரசன் அளித்திருக்கும் பேட்டியில், ''உணவு கிடைக்காமல் நான் மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். அதை உணர்ந்த நான் உணவு இல்லாமல் வாடுபவர்களுக்கும் சமைத்து கொடுக்கிறேன். தொழிலை விரிவுபடுத்த வங்கியில் கடன் கேட்டேன். மறுத்து விட்டார்கள். எதிர்காலத்தில் ஆதரவற்றவர்களுக்கு இல்லம் அமைத்து உதவ வேண்டும் என்பது எனது லட்சியம்'' என்று தெரிவித்துள்ளார்.