மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. மர்ம மரணங்கள்.. தேனி அருகே பீதி கிளப்பும் கல்வி நிறுவனம்
மதுரை: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தனியார் இலவச கல்வி நிறுவனத்தின் மீது, மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு, மர்ம மரணங்கள் ,பண மோசடி போன்ற திகில் நிறைந்த குற்றச்சாட்டுகள் தொடர்கிறது.
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் உள்ளது அந்த சர்ச்சைக்குரிய கல்வி நிறுவனம். வெளிநாட்டை சேர்ந்த ஒரு நல்லுள்ளம் படைத்தவரால் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் இதுவாகும். தாய், தந்தையை இழந்த மாணவ-மாணவியர்களை தத்தெடுத்து கல்வி போதிக்கும் ஒரு நிறுவனம், மற்றும் ஏழைகளுக்கு இலவசமாய் வீடுகள் கட்டி வழங்குவதிலும் உள்நோயாளி, வெளி நோயாளிகளுக்கும் சிறந்த மருத்துவம் இலவசமாய் வழங்கி உதவியது இந்த கல்வி நிலையமாகும்.
இந்த கல்வி நிலையத்தில், தற்போது 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்பொழுது கணக்கு, வழக்கு மோசடி சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் உடன்பட மறுக்கும் மாணவிகளுக்கு மற்ற உதவிகள் செய்ய மறுத்தல், மற்றும் வெளியே சொன்னால் வேறு எந்த பள்ளியிலும் சேர்த்துவிட முடியாத அளவிற்கு உங்களது பள்ளிக் கல்விச் சான்றிதழை நன்னடத்தை இல்லை என்பதை குறிப்பிட்டு வெளியே அனுப்பி விடுவோம் என்று மிரட்டியும் 2010 முதல், கடந்த 9 ஆண்டுகளாக குற்றச் செயல்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அப்பள்ளியில் படிக்கும் தாயை இழந்த சிறுமி சமீபத்தில் வெளியே அழுது கொண்டு வந்துள்ளார். இதை பார்த்த அந்த ஊரிலுள்ள பெண்கள் அந்த சிறுமையை அழைத்து விசாரித்த போது அங்கு ஆசிரியராக பணிபுரியும் ஒருவரின் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக கூறி அழுதுள்ளார். அதனடிப்படையில் மேலும் பொதுமக்கள் சென்று விசாரித்ததில் பல பாலியல் சீண்டல் சம்பவங்கள் நடைபெற்றது தெரியவந்திருக்கிறது. உடனடியாக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் அவர்கள் புகார் செய்ததை அடுத்து அந்த கல்வி நிறுவன ஊழியர் மாரியப்பன் (52) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதுபோன்று சிறுமிகளிடம் அத்துமீறி நடந்த அவருக்கும், மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அந்த நிறுவன தலைவர் மற்றும் அங்கே உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அந்தப் பகுதி மக்கள் மற்றும் தாய் தந்தையை இழந்த மாணவியரின் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து கெங்குவார்பட்டி - வத்தலக்குண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மே 18ம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.. தேதியை மாற்றி சொன்ன ஸ்டாலின்
இதனையடுத்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்த தேவதானப்பட்டி காவல் துறையினர் கைது செய்யப்பட்ட மாரியப்பனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதை அடுத்து பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். போக்சோ சட்டத்தின்கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்புடைய மற்ற ஆசிரியர்கள், இதற்கு உடந்தையாக இருந்த அந்த இலவச கல்வி நிறுவனத்தின் நிர்வாகிகள், பணியாளர்கள் அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என்கின்ற ஒரே நிலைப்பாட்டில் அப்பகுதி மக்கள் இருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பாதுகாப்பு கருதி தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு காவல்துறை சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய கடுமையான நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். கல்வி நிறுவன நிறுவனர், உடல் நலிவுற்று இருந்த நாள் முதலாக இச்சம்பவங்கள் அரங்கேறி நடைபெற்று வருகிறது என்பதும், அவர் இறந்த பின்பு மேலும் பல மர்மங்கள் இங்கு நடந்து வருகிறது என்பதும் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இது சம்பந்தமான விசாரணையை மேற்கொண்டால் பல உண்மைகள் வெளியே வரும் இதை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமை காவல்துறைக்கு உண்டு என்பதை தெரிவித்த மக்கள், 2010ஆம் ஆண்டு ஏற்கனவே இந்தப் பள்ளியில் இரண்டு மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை இந்த நிறுவனம் மூடி மறைத்து இருக்கிறது. என்பதும் விரைவில் இந்த சம்பவங்கள் வெளியே வெளிச்சத்திற்கு வரும் என்பதையும் தெரிவிக்கிறார்கள்.
இதுபற்றி முன்னாள் மாணவர் முத்துராஜ் கூறுகையில், நான் இந்த கல்வி நிறுவனத்தில் தான் படித்து வந்தேன். தாத்தா இருந்த காலத்தில் கல்வி, மருத்துவம் போன்றவை சிறப்பாக நடந்து வந்தது. அவர் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பொழுது தனியார் மருத்துவமனைக்கு நிகராக தரமான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. தாத்தா மறைவுக்குப் பின்பு தற்போதைய இயக்குனர், பொறுப்புக்கு வந்த உடன் அவர்களுக்கு சாதகமானவர்களை மட்டும் தன் கைக்குள் வைத்துக் கொண்டு, தனக்குக் கட்டுப்படாத அங்கு பணிபுரியும் ஊழியர்களை ஏதாகிலும் ஒரு குற்றச்சாட்டினை சுமத்தி பல ஆண்டுகள் அவர்கள் வேலை செய்த அனுபவம் இருந்தாலும் அவர்களை வெளியேற்றுவது வழக்கமாகிவிட்டது. இதை மூடி மறைப்பதற்கு பிரபலமான முக்கிய நபர்களை கையில் வைத்துக் கொண்டு பல்வேறு சகிக்கமுடியாத கொலை ,பாலியல் சீண்டல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார் என்று முத்துராஜ் தெரிவித்தார்.
அந்த கல்வி நிறுவனத்தில், பணிபுரிந்த பிச்சைமணி என்பவர் கூறுகையில், தாத்தா காலத்தில் கல்வித் துறையில் அலுவலக பணியாளராக நான் நீண்டகாலம் பணியாற்றி வந்தேன். எவ்வித குற்றம் குறையும் இல்லாமல் எங்களை நடத்தி வந்தார். அவர் வயது மூப்பின் காரணமாக நிர்வாகத்தை திறமையான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பொழுது தன்னிடமே படித்து, தங்கியிருந்த மாணவனிடம் கொடுத்தால் சரியாக இருக்குமா என்கிற குழப்பமான சூழ்நிலையில் தான் அவரிடமே இந்த நிர்வாகத்தை ஒப்படைத்தார். அந்த சமயம் முதல், புதிய நிர்வாகி, நிர்வாக சொத்துக்களை அபகரிப்பது, தன்னுடைய பெயரில் சொத்துக்களையும் வாங்குவது, பிடிக்காத பணியாளர்களை, பொய் குற்றச்சாட்டு கூறி வெளியேற்றுவது போன்ற காரியங்களை செய்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வருசநாடு வைகை நகரைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய கவுசல்யா என்ற மாணவியை தூக்கிலிட செய்துவிட்டு அவர் தூக்கிட்டு கொண்டதில் நிர்வாகத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது போன்ற கடிதத்தை தயார் செய்தனர். தற்போது உள்ள சூழ்நிலையில் விடுமுறை காலம் என்பதால் இந்த ஆதரவற்ற குழந்தைகளை கல்வி பாதிக்காத வகையில் வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதோடு சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளை சட்ட வளையத்துக்குள் கொண்டு வந்து உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுத்து குழந்தைகளின் எதிர்கால நலனை காப்பாற்ற வேண்டும் அதுவே எனது கோரிக்கை ஆகும் என்று தெரிவித்தார்.
எது எப்படியோ, இந்த நிறுவனத்தில் புதைந்திருப்பது மர்மங்களா? அல்லது புஸ்வானமா? என்பது விசாரணைக்குப் பின்னே தெரிய வரும்.