கமல் நடித்த படங்களிலும் நாகரீகம் இல்லை.. அவர் அரசியலிலும் நாகரீகம் இல்லை.. அமைச்சர் அதிரடி!
மதுரை: கமல்ஹாசன் நடித்த படங்களிலும் நாகரீகம் இல்லை அவரின் அரசியலிலும் நாகரீகம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது.
இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று பிரச்சாரம் செய்தார்.
நிதின் கட்காரி பிரதமராக திமுக ஆதரவு? க்ரீன் சிக்னல் கொடுத்தது அறிவாலயம்?
கமலுக்கு கண்டனம்
இதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட விளாச்சேரியில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் நடிகர் கமல்ஹாசனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.
விஷ விதைகளை விதைக்கிறார்
கமலுக்கு இந்த பேச்சும் கண்டனமும் தேவைதானா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பேசியதாவது, தமிழக மக்கள் ஒருமித்த சகோதரர்களாக இருக்கும் போது கமல் விஷ விதைகளை விதைத்து குளிர்காய பார்க்கிறார்.
வருத்தம் தெரிவிக்க வேண்டும்
கமல் மட்டும் அல்ல அரசியலில் உள்ள தலைவர்கள் அனைவரும் நல்ல விதைகளை விதைக்க வேண்டும். தான் பேசியது தவறு என்று கூறினால் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவார்கள். கமல் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காவிட்டால் அதற்கான பலனை அவர் அனுபவிப்பார்.
நாகரீகம் இல்லை
அமைதியாக இருக்கும் தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க நினைக்கிறார். கமலின் படத்திலும் நாகரீகம் இல்லை, அவரின் அரசியலிலும் நாகரீகம் இல்லை.
நீதிமன்றமே பார்த்துக்கொள்ளும்
கமலை முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதனால் கமல் விவகாரத்தில் நீதிமன்றமே என்ன முடிவாக இருந்தாலும் எடுக்கும்.
நல்ல முடிவு
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார். தமிழக மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் 7 பேர் விடுதலை தீர்மானம் இருந்தது.
ரஜினி வேண்டப்பட்டவர்தான்
அமமுகவில் சேர்ந்தவர்கள் மீண்டும் அதிமுகவில் வந்து இணைவார்கள். நடிகர் ரஜினிகாந்த் அதிமுகவுக்கு ஆதரவு தந்தால் வரவேற்போம். அவர் ஒன்றும் வேண்டாதவர் இல்லை. அனைவருக்கும் வேண்டப்பட்டவர்தான்.
காகித ஓடம்
அதிமுக கூட்டணி வலுவான கூட்டணி. திமுக, காங்கிரஸ் கூட்டணி ஒரு காகித ஓடம். மே 23ஆம் தேதிக்கு பிறகு திமுக, காங்கிரஸ், அமமுக கூட்டணி காகித ஓடம் கடல் அலை மேலே என்ற பாடல் மூழ்கிவிடும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.