ஜெயலலிதாவின் துணிச்சலில் 10 சதவீதமாவது ஓபிஎஸ்ஸுக்கும் ஈபிஎஸ்ஸுக்கும் இருக்கா.. திருமாவளவன் கேள்வி
மதுரை: பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை கேட்டால் பாதிப்பு அதிமுகவுக்குத்தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற தேசம் காப்போம் என தலைப்பிலான விளக்க பொதுக் கூட்டத்தில் திருமாவளவன் பேசினார். குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் பாதிக்கும்.
நீண்ட கால கனவு
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் போதிய ஆவணங்கள் இல்லாமல் இந்துக்களும் தடுப்புமுகாம்களில் அடைக்கும் நிலை நிச்சயம் உருவாகும். சங்பரிவார்களின் கனவுத் திட்டங்களை மட்டும்தான் பாஜக அரசு நிறைவேற்றிருக்கிறது. இந்தியாவை இந்திய ராஷ்ட்ரமாக அறிவிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் ஆகும். அதற்கு தடையாக இருக்கும் அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்து போக செய்ய வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட கால கனவு.
பாஜக
ஆனால் அதை நாங்கள் செய்ய விடமாட்டோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பாதிப்பு இஸ்லாமியர்களுக்குத்தான் என மற்ற மதத்தினர் அமைதியாக இருக்கக் கூடாது. பிரிவினையை ஏற்படுத்தி கிறிஸ்துவர்களை மெல்ல பாஜக பழிவாங்கும். தெரிந்தே அரசியலமைப்புக்கு எதிரான ஒரு சட்டத்தை பாஜக நிறைவேற்றுகிறது.
பாஜக சூழ்ச்சி
அரசியலமைப்பு சட்டம்தான் எனது வேதம் என மோடி கூறுவது அவரது வேஷம். 2021-ல் இந்தியாவில் யாரும் இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்துவர்களும் இருக்கக்கூடாது என்பதற்கான முயற்சிதான் இந்த குடியுரிமை திருத்த சட்டம். முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் என்ற அடிப்படையில் நாட்டைப் பிரிக்க பாஜக சூழ்ச்சி செய்து வருகிறது.
10 சதவீதம்
இந்த நாட்டை ஆள்வது ஆர்.எஸ்.எஸ்தான் பாஜக அல்ல எனவும், இந்தியா முழுவதிலும் ஏற்பட்டிருக்கும் தற்போதைய பதற்றத்திற்கு காரணமானவர்கள் அதிமுகவும், பாமகவும் தான். ஜெயலலிதாவின் வாரிசு என கூறிகொள்ளும் ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்க ஏன் குரல் கொடுக்கவில்லை, ஜெயலலிதாவின் துணிச்சலில் இவர்களுக்கு 10 சதவீதமாவது உண்டா? என கேட்டார்.