கொரோனா லாக் டவுன் - திருப்பரங்குன்றம் வைகாசி விசாகம் திருவிழா ரத்து
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மே 25ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரை நடைபெற இருந்த விழா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்படுகிறது.
மதுரை: முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடைபெறவிருந்த வைகாசி விசாகத் திருவிழா, கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் பால் குடம், காவடிகள் எடுத்துக்கொண்டு பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் முருக பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆறுமுகக் கடவுளான முருகப் பெருமானுக்கு ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் திருவிழாக்கள் நடத்தப்பட்டாலும், வைகாசி மாதத்தில் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழா முக்கியமானதாகும். உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இத்திருவிழா கொண்டாடப்பட்டாலும், முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடைவீடுகளில் முதற்படை வீடு என்பதாலும், முருகன் தெய்வானை திருமணம் நடைபெற்ற திருத்தலம் என்பதாலும், இங்கு வைகாசி விசாகத் திருவிழா பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத் திருவிழா, ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் காப்பு கட்டுதலில் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் திருவிழா 9ஆம் நாளன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அன்றைய தினம் மூலவரான முருகப்பெருமானுக்கு மகா பாலாபிஷேகம் நடைபெறும்.
வைகாசி விசாகத் திருவிழாவைக் காண்பதற்கு மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து முருக பக்தர்கள் பல்வேறு காவடிகளை சுமந்தும் பால் குடங்களை எடுத்துக்கொண்டும் பாதயாத்திரையாக வந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவதுண்டு. மேலும், அன்றைய நாளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி கிரிவலம் வருவதுண்டு.
ஹீரோ...சிவகார்த்திகேயன் ஸ்ட்ரெஸ் லிஸ்ட்!
இந்த ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா வரும் மே 26ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா வரை நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. கோவில்களில் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் மட்டுமே தொடர்ந்து பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் நடந்து வருகிறது.
பங்குனி உத்திரம் தொடங்கி சித்திரை திருவிழா வரை எந்த முக்கிய விழாக்களும் நடைபெறவில்லை. தற்போது நான்காவது முறையாக ஊரடங்கு வரும் மே 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டால், திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறும் என்று பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். வைகாசி விசாகம் திருவிழாவை நேரடி ஒளிபரப்பாவது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், வைகாசி விசாகத் திருவிழா நாளில் பக்தர்கள் யாரும், காவடி எடுத்து வரவேண்டாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 25ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரை நடைபெற இருந்த விசாகம் திருவிழா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.