ராஜீவ் கொலை வழக்கு.. ரவிச்சந்திரனுக்கு ஜாமீன் வழங்க தயார்- தமிழக அரசு
மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் 7 பேரும் சிறையில் உள்ளனர். இதையடுத்து இவர்களுக்கு பரோல் கோரப்பட்டது. அதில் முதலில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது.
இதையடுத்து நளினி தனது மகள் திருமணத்துக்காக பரோல் கேட்டார். ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாக ஆஜரான தமிழர அரசு வழக்கறிஞர், முறைப்படி பரோல் மனு கோரி ரவிச்சந்திரன் விண்ணப்பித்தால் அவருக்கு 10 நாட்கள் பரோல் வழங்கப்படும் என தெரிவித்தார்.