கலைமாமணி விருதுகள் திரும்ப பெறப்படும்.. தகுதியற்றவர்களுக்கு விருது? ஆராய குழு! தமிழக அரசு அதிரடி!
மதுரை : அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதை தகுதியற்ற நபர்கள் பெற்றிருந்தால், அந்த விருதுகள் திரும்பப் பெறப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் தகுதியற்றோருக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளதாக நெல்லையைச் சேர்ந்தவர் தொடர்ந்த பொதுநல மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது தகுதியற்ற நபர்கள் பெற்றிருந்தால் கலைமாமணி விருது பெற்றிருந்தால் திரும்ப பெறப்படும் என்றும், அதனை ஆராய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறிய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக சங்கர் நியமனம்.. கோவை ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
கலைமாமணி விருதுகள்
தமிழக அரசு சார்பாக கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விருதுகள் அவரச கோலத்தில் நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், தகுதியற்றவர்களுக்கு விருது வழங்கப்பட்டதாகவும் நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தா. அந்த மனுவில் தான் நையாண்டி மேள நாதஸ்வர கலைஞராக உள்ளதாகவும், சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான தனது கலைச்சேவையை பாராட்டி கடந்த 2017ல் கலைமாமணி விருது வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தகுதியில்லாத பலருக்கும் விருது
தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மணி, கலை நன்மணி மற்றும் கலைமுதுமணி விருதுகளுக்கு வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கலைமாமணி விருதுக்கு வயது வரம்போ, தகுதியோ, நெறிமுறைகளோ இல்லையென தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான விருதை கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விருதில் தகுதியில்லாத பலருக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அவசர கோலத்தில்
கலைமாமணி விருதுக்காக வழங்கப்பட்ட சான்றிதழில் உறுப்பினர் - செயலர் மற்றும் தலைவரின் கையெழுத்து இல்லாமல் அவசர கதியில் வழங்கியுள்ளனர். எனவே, தகுதியில்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதை திரும்பப் பெறுமாறு உத்தர விட வேண்டும் என தனது மனுவில் கேட்டுக்கொண்டார். இனிவரும் காலங்களில் முறையான நடைமுறையை பின்பற்றி தகுதியான நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தனது மனுவில் கோரியிருந்தார்.
ஆராய குழு
இந்த பொது நல மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயணா பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவிற்கு பதில் அளித்த தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் - செயலர் விஜயா தாயன்பன், கடந்த அதிமுக ஆட்சியில் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டவர்களின் தகுதிகள் மற்றும் அவர்களது கலைப்பணி அனுபவம் குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது, அவர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிப்பார்கள் எனத் தெரிவித்தார்.
விருதுகள் ரத்து செய்யப்படும்
மேலும், விருது பெற்றவர்களில் தகுதியற்றவர்கள் என தெரியவந்தால் அவர்களுக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருது திரும்பப் பெறப்படும். விருதுகள் ரத்து செய்யப்படும் என விஜயா தாயண்பன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் தமிழக அரசின் துரிதமான நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.