சாத்தான்குளம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் அரசு வழக்கறிஞர்
மதுரை: சாத்தான்குளம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் போலீசாரின் நடவடிக்கைகளுக்காக அரசு வழக்கறிஞர் இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
சாத்தான்குளத்தில் வர்த்தகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்தனர். இது தொடர்பாக தாமே முன்வந்து விசாரணை நடத்தியது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.
மேலும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து விசாரணைக்கு சென்ற மாஜிஸ்திரேட்டுக்கு போலீசார் ஒத்துழைக்கவில்லை. அத்துடன் மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தூத்துக்குடி ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் இருவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர்.
அம்பலமான பிரேத பரிசோதனை அறிக்கை.. சாத்தான்குளம் போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யலாம்- ஹைகோர்ட் அதிரடி
அப்போது, போலீசாரின் செயல்பாடுகளுக்கு அரசு வழக்கறிஞர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். ஏற்கனவே மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்த போலீஸ் கான்ஸ்டபிள் மகாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.