மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிலத்தை முழுமையாக தரவில்லை.. வெங்கடேசன்
Recommended Video
மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கும் பணி இன்னும் முழுமை அடையவில்லை என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசன் 18வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மகா கலைஞன், மகா நடிகன் சிவாஜி கணேசன் நினைவு நாளில் அஞ்சலி செலுத்தி மதுரை தனது மகத்தான கலைஞனை நினைவு கூர்கிறது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனைப் பணிகளை விரைவுப் படுத்த இரு முறை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். 3 ஆண்டுகளில் நிச்சயம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இன்னும் தமிழக அரசு, நிலத்தை ஒப்படைக்கும் பணி முழுமை அடையாமல் உள்ளது. விரைந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.
கீழடி 5ம் கட்ட அகழாய்வு பணிகள் குறித்து அடுத்த வாரம் பார்வையிட உள்ளேன். மதுரையை சுற்றி நரசிங்கம்பட்டி போன்று பரந்து விரிந்து புதைந்து கிடக்கின்ற பல்வேறு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள தேவையான முயற்சிகளை வருங்காலங்களில் எடுப்போம் என்று தெரிவித்தார்.