என்னாது காங்கிரஸ் கட்சி மிட்டா மிராசு கட்சி.. பரம ஏழை கட்சிங்க.. அமைச்சருக்கு கே எஸ் அழகிரி பதில்!
மதுரை: காங்கிரஸ் கட்சி மிக வறுமையில் உள்ள கட்சி என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அவரது சொத்து மதிப்பு ரூ 91 கோடி என குறிப்பிட்டுள்ளார். ரூபி மனோகரனுக்கு சொந்தமாக 23 கோடியே 11 லட்சத்து 98 ஆயிரத்து 65 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
சொத்துகள்
அவருக்கு அடுத்த இடத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணன் உள்ளார். அவருக்கு 1.28 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்தார். நாம் தமிழர் வேட்பாளர் ராஜநாராயணனுக்கு 32.37 லட்சம் சொத்து மதிப்பு இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜெயக்குமார்
இதனால் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே ரூபி மனோகரன்தான் பணக்காரர் வேட்பாளர் ஆவார். இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
மிட்டாமிராசுகள்
அப்போது நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் சாமானிய தொண்டர் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார. ஆனால் காங்கிரஸ் சார்பில் கோடீஸ்வரரான ரூபி மனோகரன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் மிட்டா மிராசுகளுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும்.
90 சதவீதம்
100 சதவீதத்தில் 90 சதவீதம் பேர் காங்கிரஸ் கட்சியில் வசதி படைத்தவர்கள்தான் என தெரிவித்தார். இதற்கு கே எஸ் அழகிரி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் மிகவும் வறுமையில் இருக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி.அதிமுக போல் பணத்தை வாரி இறைத்து செலவு செய்யும் கட்சியில் இந்தியாவிலேலே இல்லை என்றார்.