மதுரையில் மறுதேர்தல் நடத்துக... உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு
மதுரை: மதுரை தொகுதி நாடாளுமன்றத் தேர்தலை ரத்து செய்து, மறு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டு, அதற்கு முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர அங்குள்ள ஒரு அறையில் சட்டசபை தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த அறை சீல் வைக்கப்படவில்லை.
தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் சுளீர் அடி.. மதுரை கலெக்டரை மாற்ற அதிரடி உத்தரவு
வாக்கு எண்ணிக்கை மையம்
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு, அந்த அறைக்கு அனுமதியின்றி உதவி கலால் ஆணையர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் பெண் தாசில்தார் சம்பூரணம், ஆவண பதிவு எழுத்தர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி மண்டலம்-1 அலுவலகத்தில் பணிபுரியும் ராஜபிரகாஷ், சூரியபிரகாஷ் ஆகிய 4 பேர் சென்று திரும்பி உள்ளதாக புகார் எழுந்தது.
தர்ணா போராட்டம்
இதனையடுத்து, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சம்பூரணம், சீனிவாசன், ராஜபிரகாஷ், சூரியபிரகாஷ் ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.
மறுதேர்தல் நடத்த கோரிக்கை
இந்தநிலையில், மதுரை தொகுதி மக்களவைத் தேர்தலை ரத்து செய்து, மறு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி சுயேட்சை வேட்பாளரான வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், அருப்புக்கோட்டை உதவிபேராசிரியை நிர்மலா தேவியின் வழக்கறிஞர் என்பது நினைவுகூரத்தக்கது. இந்த மனு விரைவில் உயர்நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.
ஆட்சியர் மாற்றம்
முன்னதாக, மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியரும் ,தேர்தல் அதிகாரியுமான நடராஜனை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் அதிகாரி, காவல்துறை அதிகாரிகளையும் மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணைய நடைமுறைகளில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. தாசில்தாரை உள்ளே செல்ல அனுமதித்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.