வெல்லத்திலும் கலப்படமா.. ஏய்யா இப்படி பண்றீங்களேய்யா.. நம்பி டீ குடிக்க முடியலையே!
மதுரை: கலப்பட வெல்லம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனீர் மற்றும் காபியில் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.எனவே சர்க்கரைக்கு பதில் வெல்லம் பயன்படுத்துமாறு டாக்டர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.
இதனையடுத்து தேனீர் பிரியர்கள் சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்தி வருகின்றனர். வெல்லத்தில் கால்சியம் உள்ளிட்ட நுண்ணூட்ட சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்பதால் பொதுமக்களில் சிலர் காபி டீயில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் வழக்கம் போல இதிலும் பிராடுத்தனம் புகுந்து விட்டது. மதுரை மாவட்டத்தில் எண்ணற்ற பலசரக்குக் கடைகளில் கலப்பட வெல்லம் விற்கப்படுவதாக அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு சார்பாக ஒரு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காபி டீயில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலந்து குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம் தான். ஆனால் இது கலப்படமில்லாத வெல்லம் தானா? என்பதை பொதுமக்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் வியாபாரிகள் லாப நோக்கத்தில் சுத்தமான வெல்லம் என்று கலப்பட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பலசரக்கு மற்றும் வியாபார நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தப்படும். அப்போது கலப்பட வெல்லம் பிடிபட்டால் சம்பந்தப்பட்ட கடை வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சுத்தமான வெல்லம் என்பது அழகான பழுப்பு நிறத்தில் இருக்கும்.
ஒரு சிலர் இரண்டாம்தர வெல்லத்தில் ரசாயனம் சேர்த்து பல்வேறு நிறங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எனவே பொதுமக்கள் பலசரக்கு மற்றும் வியாபார கடைகளில் வெல்லம் வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
வெல்லத்திலும் கலப்படமா.. ஏய்யா இப்படி பண்றீங்களேய்யா..!