மதுரையில் 70 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை.. தவிப்புடன் காத்திருக்கும் மக்கள்!
மதுரை: போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மதுரை மண்டலத்தில் 30 சதவீத பேருந்துகளே இயங்குவதால், பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்து தவித்து வருகிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், சோழவந்தான், எல்லீஸ்நகர், பசுமலை, திருப்பரங்குன்றம், மேலூர், புதூர் உள்ளிட்ட 14 பனிமனைகளில் இருந்து 900க்கும் மேற்பட்ட பேருந்துகள் மதுரை நகர், புறநகர் மற்றும் தொலைதூர பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்திய நிலையில் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தைக்கு அழைக்க கோரி நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மாவட்டத்தில் 70 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது வரை 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி, செங்கோட்டை, திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய தொலைதூர பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயங்குகின்றன, இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து தொழிலாளர் சிஐடியு மாவட்ட தலைவர் அழகர்சாமி கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது பெரும்பாலான தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை இதனால் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை.மேலும் கழகங்கள் பயிற்சி இல்லாத ஓட்டுநர்களை வைத்து தற்போது பேருந்து இயக்குவதால் பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.
இதனால் பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்பதை போக்குவரத்து கழகங்கள் உணராமல் உள்ளன. எனவே 14 ஆவது ஊதிய உயர்வு தொடர்பான பிரச்சனைகளை பேசி மாநில அரசு உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பங்களை சார்ந்த இரண்டு கோடிக்கும் மேற்பட்ட வாக்குகள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை அதிமுக அரசு உணர வேண்டும் என்றார்.