தகுதி நீக்க எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு.. இடை தேர்தலிலும் போட்டி.. அதிரடி முடிவு
மதுரை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.
தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது சரிதான் என்று உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
இதையடுத்து குற்றாலம் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த 16 மாஜி எம்எல்ஏக்களும் நேற்றிரவு மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு இடம் மாறினர். பார்த்தீபன் மற்றும் வெற்றிவேல் அவரவர் ஊர்களில் இருந்தனர். நேற்று இரவு தினகரன் அந்த ஓட்டலுக்கு வருகை தந்தார்.
மதுரையில் முகாம்
அவர் நிருபர்களிடம் கூறுகையில், தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாமா அல்லது இடைத் தேர்தலை சந்திக்கலாமா என்பது குறித்து ஆலோசனை செய்யப்படும். ஆலோசனைக்கு பிறகு முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். நேற்றும், இன்றும் ஆலோசனை நடத்திய பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று தினகரன் ஆதரவு மாஜி எம்எல்ஏ தங்கத்தமிழ்ச் செல்வன் மதுரையில் இன்று மதியம் 1.45 மணியளவில் நிருபர்களை சந்தித்தார்.
சில நாட்களில் மேல் முறையீடு
அப்போது அவர், 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதற்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பித்துவிட்டன.
தேர்தலிலும் போட்டி
மேல் முறையீடு செய்தாலும் கூட, அதற்கு நடுவே, தேர்தலுக்கு தடை விதிக்காமல், தேர்தல் நடைபெற்றால் நாங்கள் அனைவரும் அதில் போட்டியிடுவோம். வெற்றி பெறுவோம். எங்கள் ஆலோசனை கூட்டத்தில் வெற்றிவேல் மற்றும் பார்த்திபன் ஆகியோர் மட்டும் பங்கேற்கவில்லை. உடல்நலக்குறைவுதான் இதற்கு காரணம்.
காரணம் இது
சபாநாயகர் தவறான முடிவை எடுத்துள்ளார். அதை அம்பலப்படுத்தவே, உச்ச நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளோம். கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சியின்போது சபாநாயகர் எடுத்த முடிவுக்கு உச்ச நீதிமன்றம்தான் முடிவு கட்டியது. இவ்வாறு தங்கத் தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.