தினகரன்-அழகிரி கள்ளக்கூட்டணி.. 'அப்படி' ஒரு ஒப்பந்தம்.. ஆர்பி உதயக்குமார் பகீர்!!
டிடிவி தினகரன் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியுடன் கள்ளக்கூட்டணி வைத்திருப்பதாக அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை: டிடிவி தினகரன் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியுடன் கள்ளக்கூட்டணி வைத்திருப்பதாக அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த இடைத்தேர்தல்களில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அரசியல் கட்சிகள் தீயாய் வேலை செய்ய தொடங்கிவிட்டன.
இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிலைமான் பகுதியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்.
[ஐநா மனித உரிமைகள் குழுவில் உறுப்பினரானது இந்தியா.. 188 நாடுகள் ஆதரவு!]
எதிர்க்கட்சிகள் கனவு
அப்போது அவர் கூறியதாவது, திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என்பது உலகத்திற்கு தெரியும். அந்த கோட்டையில் கொடியேற்றி விடலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காண்கின்றனர்.
அழகிரியுடன் கள்ளக்கூட்டணி
இதில் நம்மை எதிர்க்கும் எதிரிகள், உதிரிகள் எல்லாம் கூட்டணி வைத்துக்கொள்கின்றனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள தினகரன், திமுகவில் இருந்து ஒதுக்கி வைத்துள்ள அழகிரியுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளார் என்று ஒரு செய்தி உலா வருகிறது.
கள்ளக்கூட்டணி வைத்தாலும்
அதன்படி திருவாரூரில் அழகிரியை வெற்றி பெற வைக்கவும், திருப்பரங்குன்றத்தில் தினகரன் அணியை வெற்றி பெற செய்யவும் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. யார் கள்ளக்கூட்டணி வைத்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்து விட முடியாது.
தேதி அறிவிக்கப்படும்
திருப்பரங்குன்றம் தேர்தல் தள்ளி போனதற்கு காரணம் தி.மு.க. போட்ட வழக்கு தான். அந்த வழக்கு விசாரணை 27ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. அதன் பின்பு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்தார்.