18 ஆதரவாளர்களுடன் நாளை ஆலோசனை கூட்டம்.. டிடிவி தினகரன் அதிரடி திட்டம்!
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்ததை அடுத்து தினகரன் ஆதரவாளர்கள் மதுரைக்கு சென்றுள்ளனர்.
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்ததை அடுத்து தினகரன் ஆதரவாளர்கள் மதுரைக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் நாளை டிடிவி தினகரனுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சரியானதே என்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.
இதனால் தினகரன் தரப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தினகரன் ஆதரவாளர்கள் அடுத்து என்ன செய்வார்கள், தினகரனின் திட்டம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
குற்றாலத்தில் தங்கி இருந்த ஆதரவாளர்கள் எல்லோரும் தற்போது மதுரையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு வந்துள்ளனர்.
அங்கு அவர்கள் தினகரனுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். இன்று இந்த கூட்டம் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் நாளைதான் இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதுகுறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வதா அல்லது தேர்தலை சந்திப்பதா என 18 பேரிடமும் நாளை கேட்க உள்ளேன். நீதிமன்ற தீர்ப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தாது.
தமிழகத்தில் இடைத்தேர்தல் வருமா என்பது சந்தேகமாக உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால் அதில் வாக்கெடுப்பு நேரத்தில் ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவை எதிர்த்து வாக்களித்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவோமா என்று நாளை முடிவு செய்வோம். பல தியாகங்களை செய்துவிட்டு 18 பேரும் எங்களுடன் இருக்கிறார்கள்.
எனக்கு ஆதரவாக அமைச்சர்கள் ஆர்.கே.நகரில் வாக்கு கேட்டதை மக்கள் மறக்க மாட்டார்கள். அ.தி.மு.க. கட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அ.ம.மு.க.வினால்தான் முடியும்; ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் நாங்கள் என விரைவில் நிரூபிப்போம், என்றுள்ளார்.