உசிலம்பட்டியில் களம் இறங்குகிறாரா டி.டி.வி.தினகரன்... விறு விறு தேர்தல் பணிகள்..!
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் களமிறங்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் உசிலம்பட்டி சற்று பரந்து விரிந்த தொகுதியாக உள்ளது.
சாதிரீதியான வாக்குகள் வெற்றிக்கு கை கொடுத்து உதவும் என்பதால் உசிலமபட்டி தொகுதி டிடிவியின் பரிசீலனையில் உள்ளது.
பார்வார்டு பிளாக்
பார்வார்டு பிளாக் கட்சியின் கோட்டையாக திகழும் உசிலம்பட்டி தொகுதியில் இருந்து தான் தொடர்ந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராக மூக்கையா தேவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுமட்டுமல்லால் கடந்த 1957-ம் ஆண்டு முதல் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற 13 சட்டமன்றத் தேர்தல்களில் 8 முறை பார்வார்டு பிளாக் வென்றிருக்கிறது.
யோசனை
முக்குலத்தோர் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதி என்பதால் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இந்த முறை உசிலம்பட்டியில் போட்டியிடும் யோசனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடும் திட்டமும் அவரிடம் இருக்கிறது.
தொகுதியை கைப்பற்ற
சசிகலா விடுதலைக்கு பிறகு ஏற்படும் அரசியல் தாக்கங்களை மையமாக வைத்து அவர் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பார் எனத் தெரிகிறது. திமுக கூட்டணியில் பார்வார்டு பிளாக் கட்சியின் கதிரவனுக்கு இந்த தொகுதி ஒதுக்கக்கூடும் எனக் கூறப்படும் நிலையில், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மகிழன் என்பவரும் தொகுதியை கைப்பற்ற தீவிர முயற்சி செய்து வருகிறார்.
தேர்தல் பணிகள்
தனது நம்பிக்கைக்கு உரியவராகவும், வலதுகரமாகவும் திகழ்ந்த வெற்றிவேலின் திடீர் மறைவு காரணமாக டிடிவி தினகரன் இந்த தேர்தலில் சென்னையில் போட்டியிடும் திட்டத்தை கைவிட்டிருக்கிறார். சசிகலா விடுதலைக்கு பிறகு அரசியலில் பாய்ச்சல் காட்டும் திட்டத்திலும் இருக்கிறார்.