2 வயது குழந்தையின் மூளையில் காசநோய்.. சிகிச்சை கொடுத்து அசத்திய மதுரை அரசு டாக்டர்கள்
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 வயது குழந்தையின் மூளையில் காசநோய் ஏற்பட்டதை அடுத்து மதுரை அரசு மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர்.
காசநோய் என்பது மைக்கோ பாக்டீரியா எனும் நுண்ணுயிரியின் தாக்குதலால் ஏற்படுகிறது. இது பொதுவாக நுரையீரலைத் தாக்கி எலும்புகள், சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பகுதிகளிலும் ஏற்படக் கூடும்.
காசநோயால் பலர் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய் மூளையில் மிகவும் அரிதாக வரும். அது 2 வயது குழந்தைக்கு வந்துள்ளது. எனினும் அக்குழந்தைக்கு மதுரை மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்து அசத்தியுள்ளனர்.
சிகிச்சை
இது குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் மருதுபாண்டி செய்தியாளர்களிடம் கூறுகையில் மதுரை அரசு மருத்துவமனையில் 2 வயதுடைய குழந்தைக்கு உலகிலேயே இல்லாத வகையில் மூளையில் காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கண்டறிய முடியவில்லை
திண்டுக்கல் மாவட்ட சிறுமலை பகுதியை சேர்ந்த தம்பதி சங்கர் , சோலையம்மாள் தம்பதிக்கு 2 அரை வயதில் பரமேஸ்வரி என்ற பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில் இவர் உடல் மெலிந்து குறிப்பிட்ட நோய்களின் அறிகுறிகள் இல்லாமல் நோயுற்றுள்ளார். இதனால் தனியார் மருத்துவமனையில் நோயின் தன்மையை கண்டறிய முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.
மூளையில் காசநோய்
அதனை தொடர்ந்து சிறுமலை பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தின் உதவியோடு பரமேஸ்வரி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் நல பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு பரிசோதனைகள் செய்தும் குழந்தையின் நோயினை கண்டறிய முடியவில்லை. பின் மருத்துவர்கள் குழந்தையின் நிலையை முழுமையாக கவனித்து வந்ததில் பரமேஸ்வரிக்கு மூளை பகுதியில் காசநோய் உள்ளது தெரியவந்துள்ளது.
தரமான சிகிச்சை
உலகிலேயே யாருக்கும் காசநோய் மூளையில் ஏற்படாத வகையில் பரமேஸ்வரிக்கு ஏற்பட்டதை நினைத்து மருத்துவர்கள் வியந்துள்ளனர். பரமேஸ்வரிக்கு காசநோய் தொடர்பான சிகிச்சை அளித்துள்ளனர்.
6 மாதங்கள்
தொடர்ந்து சிகிச்சையில் குழந்தைக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் மருதுபாண்டி மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் நந்தினி குப்புசாமி தெரிவித்தனர். மேலும் பரமேஸ்வரிக்கு தொடர்ந்து 6 மாதங்கள் கவனித்து முழுமையாக குணமடைய சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.