அரசு மருத்துவமனையில் இருந்து.. பெண் உள்பட 2 கொரோனா நோயாளிகள் எஸ்கேப்.. சுகாதாரத்துறையினர் வலைவீச்சு
மதுரை: தோப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் உள்பட 2 பேர் தப்பியோடி விட்டனர். அவர்களை சுகாதாரத்துறையினர் தேடிவருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வரை 88 ஆண்கள், 51 பெண்கள் உட்பட 139 பேர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 ஆண்கள், 7 பெண்கள் உட்பட 17 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஏற்கனவே தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களில் 10 ஆண்கள், 6 பெண்கள் உட்பட 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது 139 பேர் சிகிச்சை பெற்று வரக்கூடிய மருத்துவமனை வளாகத்தில் ஒரு பெண் உடள்பட இருவர் தப்பியோடியுள்ள அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனை நிர்வாகம் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தப்பிச்சென்ற நபர்கள் யார்? அவர்கள் எந்தப் பகுதியை சேர்ந்தவர்கள்? அவர்கள் எப்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்? என்று விவரப் பட்டியலை சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தப்பிச்சென்ற நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.