வேலூரிலிருந்து மதுரை வந்த ரவிசங்கர் பிரசாத் நிகழ்ச்சி திடீர் ரத்து.. அவருக்கே லேட்டாதான் தெரியுமாம்
Recommended Video
மதுரை: வேலூரிலிருந்து பாஜக கூட்டத்தில் பங்கேற்க மதுரை வந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு, அதன்பிறகுதான், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, ரவிசங்கர் பிரசாத்தே இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
காஷ்மீர் தாக்குதலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். சிஆர்பிஎப் வீரர்களின் தியாகம், வீணாகாது. சரியான பதிலடி இந்தியாவால் கொடுக்கப்படும். உலகமே இந்த விஷயத்தை கண்டித்துள்ளது. பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரைக்கு வந்த பிறகு தெரியும்
யாரெல்லாம் இந்த மோசமான செயலுக்கு பின்னணியில் உள்ளார்களோ, அவர்களுக்கு தண்டனை கொடுப்பது உறுதி. இன்று மதுரையில், பாஜக தொண்டர்களுடனான பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், காஷ்மீரில் பலியான, வீரர்களுக்கு அஞ்சலி அளிக்கும் விதமாக, தமிழக பாஜக இன்று நடத்தவிருந்த இந்த கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளது. நான் மதுரை வந்த பிறகுதான் எனக்கு இந்த தகவல் சொல்லப்பட்டது. நானும் இதை உளமாற ஏற்கிறேன்.
தமிழகத்தில் நலத்திட்டங்கள்
மதுரையில் சில பொதுவான கவனிப்புகளை மேற்கொண்டேன். தமிழக வளர்ச்சிக்கு நரேந்திர மோடி மிகுந்த முக்கியத்துவம் தருகிறார். மதுரை, வேலூர் ஸ்மார்ட் சிட்டியாக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 25 ஆயிரம் கோடிக்கும் அதிக செலவில் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. வேலூர், மதுரையில் பிபிஓக்கள் வர உள்ளன.
ஸ்வச் பாரத் திட்டம்
நாலரை ஆண்டுகளில் நாடு முழுக்க 52 லட்சத்துக்கும் மேலான கழிவறைகளை ஸ்வச் பாரத் திட்டத்தில் கட்டியுள்ளோம். அதில் 10 லட்சம் கழிவறைகள் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ளன. சிறு வர்த்தகர்களுக்கு கடன் உதவி வழங்கும் முத்ரா திட்டத்தின்கீழ், 7.5 லட்சம் கோடி கடன் தரப்பட்டுள்ளது. அதில், 2 லட்சம் கோடி கடன்கள் தமிழகத்தில் பெறப்பட்டுள்ளது.
கூட்டணி உறுதி
துறைமுகம், எய்ம்ஸ், ஸ்மார்ட் சிட்டி, ஸ்வச் பாரத், முத்ரா என எந்த திட்டமாக இருந்தாலும், நரேந்திர மோடி அரசு தமிழகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. தமிழகத்தில் பாஜகவும் வளர்ந்து வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் நல்ல போட்டியை கொடுக்கப்போகிறது. விரைவில் கூட்டணி முடிவு செய்யப்படும். மிகவும் வலிமையான கூட்டணியை பாஜக அமைக்க உள்ளது. தமிழக மக்களும் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். நாடு முழுக்க, பாஜக மட்டுமே 300 சீட்டுகளுக்கு மேல் வெல்லக்கூடும்.
ஒரே குறிக்கோள்
மகாகட்பந்தன் என்பது சந்தர்ப்பவாத கூட்டணி. எப்படி அவர்கள் நாட்டுக்கு நல்லது செய்வார்கள், யார் அவர்கள் தலைவர்கள் என்பது குறித்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், நரேந்திர மோடியை அகற்றுவது மட்டுமே அவர்கள் அஜென்டா. இதற்கு மக்களே பதிலடி தருவார்கள்.