ஆஹா.. என்னா டிரிக்கு.. வடிவேலு பாணியில் வெங்காயத்தை ஆட்டையைப் போட்ட ஆசாமி!
Recommended Video
மதுரை: மதுரையில் வடிவேலு பட பாணியில் வெங்காயத்தை ஆட்டையைப் போட்ட நபரைப் போலீஸார் கைது செய்தனர்.
மதுரை கோமதி புரத்தில் உள்ள மளிகைக்கடையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் பலசரக்கு வாங்க சென்றார். சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு கடையில் இருந்த 2 கிலோ வெங்காயத்தை நைசாக எடுத்து பையில் நிரப்பிக் கொண்டார்.
அதன் பிறகு கடையிலிருந்த ஊழியரிடம் உங்கள் முதலாளியிடம் அரிசி வாங்க ரூபாய் 1500 முன்பணம் கொடுத்து உள்ளேன். எங்களுக்கு இப்போது அரிசி தேவையில்லை எனவே நான் கொடுத்து உள்ள முன்பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டார். அப்போது கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே கடை ஊழியர் முதலாளியிடம் பேசிவிட்டு ரூ1500 கொடுத்து உள்ளார்.
இதனை பெற்றுக் கொண்டு அந்த நபர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். இந்த நிலையில் கடைக்கு வந்த முதலாளியிடம் ஊழியர் ரூ1500 ரூபாய் கொடுத்தது பற்றி கூறியுள்ளார். இதனைக் கேட்ட முதலாளி,யார் அவர்? என்று அறிவதற்காக கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்துள்ளார்.
அப்போதுதான் அந்த நபர் ஊழியரின் கவனத்தை திசைதிருப்பி கடையில் இருந்த வெங்காயம் முதல் தின்பண்டம் வரை பல்வேறு பொருட்களை திருடியது தெரியவந்தது. சினிமாவில் நடிகர் வடிவேலு கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து எடைக் கற்கள் மற்றும் தராசை திருடிக்கொண்டு ஓடி விடுவார். அதே பாணியில் மர்மநபர் மளிகை கடையில் பலசரக்கு பொருட்களை திருடி விட்டு 1500 ரூபாய் பணத்தையும் மோசடி செய்து விட்டு சென்று உள்ளார்.
இதையடுத்து கடை முதலாளி அந்த நபரை கையும் களவுமாக பிடிக்க விரும்பினார். எழுத்துக்காரர் தெருவில் நகை பட்டறை சொந்தமாக நடத்தி வருகிறார் . அதே நபர் நேற்று மாலை 6 மணியளவில் மீண்டும் அந்த கடைக்கு வந்தார். அவரை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணை நடத்தியதில் அவர் மதுரை கோமதிபுரம் கொன்றை வீதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 51) என்று தெரியவந்தது.
அப்துல் ரகுமான் அந்த மளிகை கடைக்கு வந்த நாட்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அவர் சில மாதங்களாக பிஸ்கட் முதல் பாஸ்மதி அரிசி பாக்கெட் வரை மதிய உணவு நேரத்தில் பையில் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் அப்துல் ரகுமானை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.