வைகாசி விசாகம் : திருப்பரங்குன்றத்தில் பால்குடம் - பழனியில் தேரோட்டம்
வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பால்குடம் எடுத்தும் காவடி சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மதுரை: தமிழ்கடவுள் முருகன் அவதரித்த வைகாசி விசாகத் திருநாள் தமிழகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய முருகனின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வந்து வழிபட்டனர்.
முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் விசாகத்திருவிழா கடந்த 7ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான விசாகத்திருநாளை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பால்காவடி, பன்னீர் காவடி, பறவைக்காவடி எடுத்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனியில் வைகாசி விசாகத்திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. நேற்றைய தினம் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வைகாசி விசாக நாளான இன்று தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 7.30 மணிக்கு தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.