பாஜகவுக்கு அடிபணிவதில் தமிழக அரசு முதலிடம்... வைகோ விளாசல்
மதுரை: பாரதிய ஜனதா கட்சிக்கும், மத்திய அரசுக்கும் அடிபணியும் போட்டியில் இந்தியாவிலேயே தமிழக அரசுக்கு தான் முதலிடம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
தமிழக அரசுக்கு மத்திய அரசு நல்லாட்சி விருது கொடுத்துள்ள நிலையில் அது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
நீ செய்தது சரி.. உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது பிரியங்கா.. உருகும் கணவர் ராபர்ட் வத்ரா!
அடிபணியும் போட்டி
பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் யார் அதிகம் அடிபணிவது என்ற போட்டியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும், அடிபணிந்து நிற்பதில் இந்தியாவிலேயே தமிழக அரசு சிறந்து விளங்குவதாகவும் விமர்சித்துள்ளார். பல துறைகளில் முதலிடம் பிடித்ததற்காக தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கிடைத்துள்ள நிலையில் வைகோ இந்தக் கருத்தை கூறியுள்ளார்.
அத்துமீறி
மேலும், வெள்ளிக்கிழமையன்று முதற்கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பிரமுகர் ஒருவர், வாக்காளர்கள் அளிக்க வாக்குகளை அவரே வாக்களித்து வாக்குப்பெட்டியில் போட்டது கண்டிக்கத்தக்கது என்றும், இது தொடர்பான வீடியோவை பார்த்து தாம் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறினார்.
வழக்கு
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடுகளும், தில்லுமுல்லுகளும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், முறைகேடுகள் நிகழாத வண்ணம் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
நிச்சயம்
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்களுக்கான பதவியிடங்களை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி நிச்சயம் வெல்லும் என்றும், அதில் சந்தேகமே வேண்டாம் என்றும் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.