அங்கன்வாடியில் அன்னலட்சுமி சமையல் செய்யக் கூடாது.. வலையப்பட்டியில் கடும் எதிர்ப்பு
மதுரை: மதுரை மாவட்டம் வலையப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தாழ்த்தப்பட்டோர் சமைத்தால் நாங்கள் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என கிராமமக்கள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ளது வலையப்பட்டி கிராமம். இங்கு அங்கன்வாடி உதவியாளராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அன்னலட்சுமி சமையல் கூட உதவியாளர் பணிக்கு நியமிக்கப்பட்டதை அறிந்த கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அன்னலட்சுமி சமைத்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என கிராமத்தினர் தெரிவித்தனர். இதனால் இவர் வேறு ஒரு கிராமத்திற்கு மாற்றப்பட்டார்.
உட்கட்சி பூசல் சரியாய்ருமா.. குழப்பமா இருக்கே.. பேசியவர்களை விட்டுவிட்டு மீடியா மீது பாயும் அதிமுக
உத்தரவு
இந்த நிலையில் மற்றொரு தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் ஜோதிலட்சுமி மதிப்பனூரில் அங்கன்வாடி ஊழியராகவும் சமையல் உதவியாளராகவும் நியமனம் செய்யப்பட்டார். இவர் கிழவனேரிருக்கு மாற்றப்பட்டார். இருவருக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்து மாற்றம் செய்யபட்டுள்ளனர்.
தாக்குதல்
வலையப்பட்டி கிராமத்தில் இரு பிரிவினரிடையே சமூக மோதல்கள் இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிகாரிகள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தாலும் தீர்வு ஏற்படாத நிலை காணப்படுகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்து பெண் சமையலராக நியமிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் காலனியில் கதவுகளை உடைத்து, வாகனங்களை உடைத்து பெரும் தாக்குதல் நடத்தினர்.
தலித் மக்கள்
இதுகுறித்து ஜோதிலட்சுமியும் அன்னலட்சுமியும் கூறுகையில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு தலித்துகளை அனுமதிக்காத போதிலிருந்தே பிரச்சினை எழுந்தது. நாங்கள் கோயில் வாசலில் நின்று தேங்காய் உடைக்கவும் எங்களை இளைஞர்கள் அனுமதிக்கமாட்டார்கள். அதுபோல் ஜல்லிக்கட்டு விளையாட்டிலும் தலித் மக்கள் சேர்த்து கொள்ளப்படவில்லை.
விருப்பம்
ஜூன் 3-ஆம் தேதி அங்கன்வாடி பணியாளருக்கான ஆணையை நான் பெற்றேன். அன்று முதல் என்னை பணியாற்ற விடவில்லை, அது என்னை மிகவும் பாதித்தது. தற்போது ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மதிப்பனூரில் இருந்து ஆலபலசேரிக்கு பேருந்தில் பயணம் செய்கிறேன். இந்த பணிக்காக நான் 18 வயது முதல் முயற்சித்து வருகிறேன். குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதுதான் எனது விருப்பம் என தெரிவித்தனர்.