வறியோர்களின் அமுதசுரபி... மதுரையில் ரூ.10-க்கு சாப்பாடு விற்ற ராமு தாத்தா..!
மதுரை: மதுரையில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான ஏழை எளியோர்களின் பசியாற்றிய ராமு தாத்தா மறைந்துவிட்ட நிலையில், அவர் நடத்தி வந்த வள்ளி உணவகத்தை அவரது மகன்கள் தொடர்ந்து நடத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தன்னை பொறுத்தவரை பணம் ஒரு பொருட்டில்லை, மக்களின் மனம் தான் முக்கியம் எனக் கருதி வாழ்நாளின் இறுதிமூச்சு வரை தொண்டாற்றி வந்தார் ராமு தாத்தா.
இந்நிலையில் அவரது மறைவால் வள்ளி உணவகத்தின் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி... தமிழக காங்கிரஸ் கமிட்டி சூளுரை
ராமு தாத்தா
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவர் மதுரை அரசு மருத்துவமனை அருகே வள்ளி உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். கடந்த 1967-ம் ஆண்டு தொடங்கிய இந்த உணவகம் மூலம் ஆயிரக்கணக்கானோரின் பசிப்பிணியை தீர்த்து வைத்துள்ளார் இவர். தொடக்ககாலங்களில் ஒரு ரூபாய்க்கு சாப்பாடு விற்ற அவர் தற்போது பத்து ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தார். இதைவிட குறைவான விலையில் சாப்பாடு, சாம்பார், கூட்டு, ரசம், மோர், ஊறுகாய் என எந்தக் கடையிலும் கொடுப்பதாக தகவல் இல்லை.
உபசரிப்பு
மதுரை ராமு தாத்தாவை பொறுத்தவரை தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு முடிந்து புறப்படும் முன், சாப்பாடு எப்படி இருந்தது, ஏதேனும் குறைகள் இருந்ததா என அன்பாக விசாரிப்பார். இதேபோல் கடைக்கு சாப்பிட வருபவர்களை ராமு தாத்தா கனிவாக உபசரித்து அவர்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டு கேட்டு அதை கொடுப்பார். கடை தொடங்கிய முதல் நாள் போல் தன் இறுதி நாள் வரை வாடிக்கையாளர்களிடம் அவர் காட்டிய அன்பும், கனிவும் மதுரையை தாண்டியும் அவருக்கு நற்பெயர் ஈட்டித்தந்தது.
பிடிவாதம்
ராமு தாத்தாவை ஓய்வெடுக்குமாறும் உணவகத்தை மூடிவிடுமாறும் அவரின் மகன்கள் கேட்டுக்கொண்டும் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். 91 வயதிலும் பிடிவாதமாக உணவகத்தை நடத்தி ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கி தொண்டாற்றினார். இப்படிப்பட்ட ராமு தாத்தா உடல்நலக் குறைவால் மறைந்தது அவரது வாடிக்கையாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பார்வையாளர்கள்
மதுரை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உள்நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள், கூலித்தொழிலாளிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பல தரப்பட்ட மக்களும் ராமு தாத்தா கடையின் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். இதனிடையே மறைந்த ராமு தாத்தாவுக்கு 4 மகன்கள் உள்ள நிலையில் அதில் ஒருவர் தனது தந்தையின் நினைவாக கடையை தொடர்ந்து நடத்துவார் எனக் கூறப்படுகிறது.