2024-ல் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இது நடக்கும்! எல்.முருகன் ஒரு சர்கஸ் புலி! திருமா கிண்டல்!
மதுரை: 2024-ஆம் ஆண்டு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் முதலில் கை வைக்கப் போவது அரசியலமைப்புச் சட்டத்தில் தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதை போகிற போக்கில் தாம் சொல்லவில்லை என்றும், ஒவ்வொருவரும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் எனவும் திருமாவளவன் சவால் விடுத்துள்ளார்.
மேலும், எல்.முருகன் சர்கஸ் புலியை போல் பாஜகவில் இருப்பதாக அவர் கிண்டல் அடித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
உதய்பூர் டெய்லர் படுகொலை- சனாதனிகள் விரித்த சதிவலையில் சிக்கிய கொடுஞ்செயலே.. தொல். திருமாவளவன்
பாஜக கையில்
திரவுபதி மர்முவாக இருந்தாலும் சரி எல்.முருகனாக இருந்தாலும் சரி அவர்கள் கூண்டுக்கிளியை போலவும், கோவில் யானையை போலவும், சர்க்கஸ் புலியை போலவும் தான் பாஜக கையில் இருக்கிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பேன், மாநில அரசுகளுக்கு உரிய மரியாதையை வழங்குவேன் என யஷ்வந்த் சின்ஹா கூறுகிறார், ஆனால் அது போன்று திரவுபதி மர்முவால் கூற முடியாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எழுதி வைத்துக் கொள்ளவும்
2024-ஆம் ஆண்டு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் முதலில் கை வைக்கப் போவது அரசியலமைப்புச் சட்டத்தில் தான் என மிகவும் ஆணித்தரமாக பொதுக்கூட்டத்தில் கூறினார் திருமாவளவன். இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் பாஜக அரசு நிச்சயம் கை வைக்கும் எனவும் சவாலே விடுத்தார். பாஜகவுக்கு முதல் எதிரியே அம்பேத்கரால் எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தான் என திருமாவளவன் பேசினார்.
இட்டுக்கட்டி பேசவில்லை
தாம் ஏதோ இட்டுக்கட்டி பேசுவதாக யாரும் எண்ணிவிட வேண்டாம் என்றும் ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத இயக்கம் என்றும் ஹிட்லரோடு தொடர்பு வைத்திருந்த இயக்கம் அது எனவும் திருமா குற்றஞ்சாட்டினார். ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்ற முழக்கமே ஹிட்லரிடம் இருந்து காப்பியடிக்கப்பட்ட ஒன்று என்றும் ஜாதி மத வெறியை தூண்டுவதற்கு இன்று ஆட்களுக்கு பஞ்சமே கிடையாது எனவும் திருமாவளவன் வேதனை தெரிவித்தார்.
குடியால் கெடும் குடி
இன்றைய காலகட்டத்தில் எல்லா துறைகளையும் தனியார் வசம் ஒப்படைக்கும் போக்கு மத்திய பாஜக அரசிடம் இருப்பதாகவும் மதுவால் தமிழகமட்டுமின்றி நாடு முழுவதும் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிவதாகவும் திருமாவளவன் அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.