நாளை மறுநாள் திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு.. சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்பு.. முருகன் பேட்டி
மதுரை: பாரதிய ஜனதா கட்சியின் வேல் யாத்திரை இன்று மாலை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக, மதுரை அழகர் கோவில் பழமுதிர்ச்சோலையில் நடைபெற்ற வேல் யாத்திரையில் கலந்து கொண்டு பின்னர் திருப்பரங்குன்றம் வந்த பாஜக மாநிலத் தலைவர் முருகன் திருப்பரங்குன்றம், சுப்பிரமணியசாமியை தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்களின் வேல் யாத்திரை பல்வேறு இடர்பாடுகளுக்கு பின்னர் நடைபெற்று வருகிறது. இடையில் புயலின் காரணமாக வேல் யாத்திரை தடைபட்டது. புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சேவை செய்ததற்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது இன்று திருத்தணியில் தொடங்கி மதுரை பழமுதிர்ச்சோலை திருப்பரங்குன்றத்திற்கு வந்துள்ளது.
பாஜகவை எப்படி தடுத்தோம் பாருங்க.. மத்த மாநிலங்களும் கத்துக்கோங்க.. தெலுங்கானா முதல்வர் மகள் கவிதா
நாளை மறுநாள் திருச்செந்தூரில் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நிறைவுபெறுகிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டு நிறைவு செய்கிறார் என்றார்.
அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறதா என்று செய்தியாளர் கேள்விக்கு, கோபத்துடன் பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தலைவர் முருகன், நீங்களாக ஒரு கேள்வி கேட்டால் நான் எப்படி பதில் சொல்ல முடியும், நான் ஏற்கனவே தெளிவாக சொல்லி விட்டேன் மீண்டும் சொல்கிறேன் நீங்களாக ஒன்றை திணிக்காதீர்கள்.
அதிமுகவுனுடைய ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தொடங்கிய கூட்டணி தொடரும் என்று தெரிவித்திருந்தனர். அந்த மேடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இருந்தார். இதுகுறித்து முறையான அறிவிப்பை எங்களுடைய தேசிய தலைமைதான் அறிவிக்கும் என்று தெரிவித்திருந்தோம். நீங்களா ஏதாவது கேட்டுக்கொண்டு சொல்லாதீர்கள் என்றார்.
பேட்டியின்போது, எச்.ராஜா உடனிருந்தார்.