வட இந்தியா பாணியில் தமிழகத்திலும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சாமியார்கள் மாநாடு-மதுரையில் திரளுகின்றனர்
மதுரை: வட இந்தியாவில் பதற்றத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய இந்து சாமியார்கள் மாநாடு தமிழகத்தில் நடைபெற உள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சாமியார்கள் மாநாடு மதுரையில் ஜூன் 4,5 தேதிகளில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் இந்தியா முழுவதும் சாமியார்கள் திரளுகின்றனர்.
வட இந்தியாவில் பல இடங்களில் இந்து துறவிகள் மாநாடு என்ற பெயரில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் முஸ்லிம்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட வேண்டும்; முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்கிற வன்முறை பேச்சுகளை சாமியார்கள் பேசினர். அத்துடன் மகாத்மா காந்தியை கடுமையாக விமர்சித்தும் கொலைகாரன் கோட்சேவை புகழ்ந்தும் சாமியார்கள் பேசி இருந்தனர்.
திருமாவுக்கு மதம்... தமிழகத்தில் ஆண்டி ஹிந்து கவர்மெண்ட்.. கொந்தளிக்கும் எச்.ராஜா
மதுரையில் சாமியார்கள் மாநாடு
சாமியார்களின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டு சர்ச்சை கருத்துகளை பேசிய சாமியார்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வட இந்தியா பாணியில் தமிழகத்தில் சாமியார்கள் மாநாடு நடத்த விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை மூலம் மாநில மாநாடு வரும் ஜூன் 4, ஜூன் 5-ந் தேதி நடைபெற உள்ளது. தேசிய, மாநில அளவில் உள்ள துறவிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
குழந்தைகளுக்கு ஆன்மீகம்
தமிழகத்தில் அறநிலையத்துறை தனித்து இயங்கும் வாரியமாக மாற வேண்டும், கோவில்களில் நிலவும் பிரச்சனைகளை சிந்தித்து தீர்வு காண வேண்டும். ஆன்மீகத்தில் பாரத நாடு உலகத்திற்கு வழிகாட்டியாக உள்ளது. குழந்தைகளுக்கு மாணவர்களுக்கு ஆன்மீகத்தை கொண்டு சேர்ப்பதற்கான நெறிமுறையை துறவிகள் வகுக்க உள்ளோம். சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைவரும் இணைந்து செயல்படுவது குறித்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் துறவிகள் பேச உள்ளோம்.
குறையும் இந்து மக்கள் தொகை
சுதந்நிர இந்தியாவில் இருந்த மக்கள் தொகைக்கும், நாட்டில் தற்போது நிலவும் இந்து மக்கள் தொகைக்கு பெரிய வேறுபாடு உள்ளது. மாநாட்டில் மதமாற்றத்தை தடுப்பது, தாய் மதம் திரும்பியவர்களை வரவேற்பது, பசுக்களை பாதுகாப்பது, ஆன்மீக சிந்தனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து துறவிகள் சிந்திக்க உள்ளோம். மதுரையில் ஜூன் 5ம் தேதி மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் அனைத்து ஆதீனங்களும், சங்காராச்சாரியரும் கலந்து கொள்ள உள்ளனர். பாஜகவுக்கு கொள்கை கொடுத்ததே துறவிகள் தான். எங்களுடைய கொள்கைகளை தான் பாஜகவினர் பேசுகின்றனர்.
துறவிகள் மாநாடு
துறவிகள் மாநாடு கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் நடைபெற்றுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை தனி வாரியமாக இருந்தது என்றால் கல்வி மருத்துவம் உள்ளிட்ட சேவை பணிகளை செய்ய முடியும். எல்லோருக்கும் தனித்தனி வாரியம் உள்ளது. மற்ற மதத்தினருக்கு தனி சலுகைகள் உள்ளன. கோவில் நிலங்களை மீட்டெடுப்பதில் இந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது. கோவில் திருப்பணிகளை மேற்கொள்ள உடனடி அனுமதி வழங்குகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை நல்ல பணிகள் செய்து கொண்டுள்ளனர். இந்து சமயநிலையத்துறை செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. இவ்வாறு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறினார்.